பண்டைய இந்தியாவில் தலை சிறந்து விளங்கிய ”அவந்தி ” தேசமே இன்றைய நேபாளம் .இங்கு இமயமலையின் அடிவாரத்தை ஒட்டினார்போல “ஹரிபர்வதம்” என்னுமோர் மலை உள்ளது .இங்கு சங்கர தீர்த்தம் என்னும் பகுதியில் ” கண்டகி ” நதி உற்பத்தியாகின்றது . இந்தப்பகுதிதான் ”சாளக்கிராமம்”‘ என்று அழைக்கப்படுகிறது . இந்த ” ஹரி ” ஷேத்திரத்தில் உள்ள சகல கற்களிலும், விஷ்ணுவின் சகல அம்சங்களும் பொருந்திய சாளக்கிராம மூர்த்திகள் புண்ணியகாலங்களில் தோன்றுவதாகக் கூறப்படுகிறது .
சாளக்கிராமம்:
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உற்பத்தியாகின்ற ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கற்களாகும். இவைகள் நத்தைக்கூடு , சங்கு , போன்ற
பலவடிவங்களிலும் , பல வண்ணங்களிலும் கிடைக்கின்றன .
மஹாவிஷ்ணு தாமாகவே , தங்கமயமான ஒளியுடன் திகழும் ” வஜ்ரகிரீடம் ” என்ற பூச்சியின் வடிவம் கொண்டு , கற்களை ( சாளக்கிராமம் ) குடைந்து , அதன் கர்பத்தை அடைந்து , அங்கு , ரீங்காரமான சப்தத்தில் , இருந்து கொண்டே தன் முகத்தினால் ,பலவிதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து , பலவித ரூபங்களில் பல மூர்த்திகளை– ( அதாவது தனது அவதார ரூபங்களை ) பல வடிவங்களில் விளையாட்டாகவே வரைந்து வெகுகாலத்திற்கு அங்கேயே இருந்து பின் மறைந்து
விடுவதாகக் கூறப்படுகிறது.
இப்பேர்பட்ட வடிவங்களே நாம் சேவிப்பதற்கு உகந்தவையாகும் .இவைகளில் ஸ்ரீமந் நாரயணின் ஜீவருபம் கலந்து இருப்பதாக ஐதீகம் .சாளக்கிராமங்களின் வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜா பலன்களும் மாறுபடுகின்றனவாம் .
1 . நீல நிறம்—செல்வம் , சுகம் ( ஸ்ரீ கிருஷ்ண ஷேத்திரம் )
2 . பச்சை—பலம் , தைரியம் ( ஸ்ரீ நாரயண ஷேத்திரம் )
3 .வெண்மை—ஞானம் , பக்தி , மோட்சம் (வாசுதேவ ஷேத்திரம் )
4 .கருப்பு—புகழ் , பெருமை ( விஷ்ணு ஷேத்திரம் )
5 .புகை நிறம்—துக்கம் , தரித்திரம்
6 .மஞ்சள் நிறம்— வாமன ஷேத்திரம்
7 . பசும்பொன் ( அ ) மஞ்சள் கலந்த சிகப்பு நிறம்—ஸ்ரீ நரசிம்ம ஷேத்திரம்
சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமின்றி , அவற்றில் 14 உலோகங்கள்
இருப்பதாகக் கூறப்படுகிறது .சாளக்கிராமம் விற்பனை செய்வதை வாங்குதல் கூடாது .பிறரால் பூஜிக்கப்பட்ட சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் , சாஸ்த்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்தும் வாங்குதல் நன்று .
சாளக்கிராமத்தை பால் ( அ ) அரிசியின் மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் , அதன் எடை முன்பு இருந்ததை விடக் கூடுதலாக இருக்கும் .
துண்டிக்கப்பட்டிருந்தாலும் ( அ ) விரிந்து போனதாய் இருந்தாலும்
சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை .
உடைந்திருந்தாலும் அதில் சக்கர ரேகைகள் இருப்பின் , அது மிகவும் சிறப்பம்சமாகும் . நேபாளத்தில் கடைத்தெருக்களில் சாளக்கிராமங்களைக் குவித்து வைத்து விற்கிறார்கள் .பெரியவர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது சிறப்பு . இராமேஸ்வரம் கோவிலிலிருந்து வடக்கே 5 மைல் தொலைவில் உள்ள ஆஞ்சனேயர் கோவிலில் தேங்காயளவு பருமனான சாளக்கிராமம் உள்ளது. இராமேஸ்வரத்தில் ஏற்பட்ட ஒரு புயலின் போது கிடைத்த இந்த சாளக்கிராமத்தில் நரசிம்ம மூர்த்தியின் திரு முகம் ரேகை வடிவில் அமைந்துள்ளது .
<div>
இராமேஸ்வரம் செல்லும் அன்பர்கள் கவனிக்க:
நேபாளத்தின் தலைநகரமான காட்மாண்டுவிலிருந்து சுமார் 65 மைல் தொலைவில் ”தாமோதர் குண்டம் ” (5,400 மீ உயரத்தில் ) என்னும் ஓர் இடம் உள்ளது .இந்தக்குளம் 10 (அ ) 12 வருடத்திற்கு ஒருமுறை பொங்கி , சாளக்கிராம கற்களைக் கக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது .
இதுவும் கண்டகி நதிக்கரையில்தான்அமைந்துள்ளது.சாளக்கிராமத்தின் வயது பல கோடி ஆண்டுகள் என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது .அறிவியல் நோக்கில் ஆராய்ந்தால் , சாளக்கிராமங்கள் ” அம்மோனைட் ”என்ற வகையைச்சார்ந்த கற்படிவம் ஆகும் . ஏறத்தாழ 7 கோடியிலிருந்து 20 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் , இடை ஊழிக்காலத்தில் ( MESOZOIC ) வாழ்ந்து பின்னர் அற்றுப்போய் விட்ட (fossil stones ) ஒருவித மெல்லுடலிகள்தான் ( marine animals-sub-class—ammonoidea ,class–cephalopoda phylum—mollusca –அடியேன் விலங்கியல் வகுப்பு மாணவியாக்கும் ) அம்மோனைட்டுகள் ( அ ) அம்மோனாய்டுகள் என்று அழைக்கப்படுகின்றன .
இந்தியா ,நேபாள் உள்ளிட்ட பல நாடுகளிலும் அம்மோனைட் படிவங்கள் கிடைக்கின்றன . ”பாற்கடலில் பிறந்தாலும் நத்தைதான் சாளக்கிராமமோ ” என்ற முதுமொழி , சேது புராணம் என்ற பழைய நூலில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளது . இதிலிருந்து நத்தை போன்ற வேறோரு உயிரின் படிவமே சாளக்கிராமம் என்று நம் முன்னோர்கள் !
அறிந்திருக்கின்றனர் . ( எதைத்தான் அறியவில்லை அவர்கள் )
இயற்கையில் மிகத்தொன்மையான அற்புதமான இந்தச் சிருஷ்டியில் நம் முன்னோர்கள், ”இறைத்தத்துவத்தைக் கண்டது நமது மரபாகும் . இன்றளவும் கண்டகி நதியில் சாளக்கிராமங்கள் ஏராளமாகஉற்பத்தியாகி நேபாளத்து வீதிகளில் விற்கப்படுவது கண்கூடு .
No comments:
Post a Comment