Friday, October 10, 2014

தன்வந்திரி அமிர்த கலச வழிபாடு



சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.
பெண்களைப் பொறுத்தவரையில் இந்தப் பழமொழிக்கே வேறு அர்த்தம் 
தர முடியும். பெண்தான் சுவர். அந்தச் சுவர் சரியாக, ஆரோக்கியமாக இருந்தால்தான் அதன் மேல் குடும்பம் என்கிற சித்திரத்தை வரைய முடியும்.எல்லாப் பெண்களுமே தங்கள் உடல் ஆரோக்கியத்தில் 
அக்கறை செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்

அமிர்த கலச மகிமை

தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்ற பாம்பின் வாலையும் தலையையும் பக்கத்துக்கு ஒருவராகப் பிடித்துக்கொண்டு பாற்கடலை கடைந்தபோது, அபரிமிதமான சக்தியுள்ள பொருட்கள் அதிலிருந்து வெளிவந்தன. 
அவற்றில் அமிர்தமும் ஒன்று.

இதிலிருந்து சிறிதளவு எடுத்து, கலசத்தில் இட்டு, வலது கையில் பிடித்தபடி பக்தர்களுக்கு வரும் நோய்களைத் தீர்க்கும் கடவுளாக தன்வந்தரி என்ற பெயரோடு சங்கு சக்ரதாரியாகக் காட்சி தந்தார் மகாவிஷ்ணு.

 அவரது அவதாரமாகிய தன்வந்தரி உருவம், மனிதர்களுக்கு வருகிற நோய்களைத் தீர்க்க வல்லது என்றாலும் பெண்களுக்கு வரும் நோய்களை அவரது அமிர்த கலசத்தின் சக்தியே தீர்க்கும்.

வழிபடும் முறை

செப்புச் சொம்பில் துளசி நீர், மஞ்சள் பொடி போட்டு , ஜாதிக்காய், ஆகியவற்றைத் தூளாக்கிப் போட வேண்டும். கலசத்தில் தேங்காயும் மாவிலையும் வைத்து அலங்கரித்து, கலசத்தை மேற்காக வைத்து துளசியும் சாமந்தி மலரும் சேர்த்த பூச்சரத்தைச் சாற்றுங்கள். முக்கனிகளான மா, பலா, வாழை (இந்தப் பழங்கள் ரொம்பவும் விசேஷம். 

கிடைக்கவில்லையெனில் ஏதேனும் மூன்று வகை பழங்கள்) ஆகியவற்றைப் படைத்து, துளசியால் கலசத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

சங்கு சக்கர கோலமிட்ட பலகையில் துளசி இட்டு, நோயுற்றிருக்கும் பெண்ணை கிழக்கு பார்த்தபடி, கலசத்தை நோக்கி உட்கார வைக்க வேண்டும். மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைக்கவும்.

முதலில் அருகம்புல்லையும் பிறகு துளசியையும் அந்தப் பெண்ணின் கையில் கொடுத்து,

''ஓம் விஷ்வக்சேனரே போற்றி
ஓம் வேழ முகத்தவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையவனே போற்றி
ஓம் நம்பினோர்க் கருள்வாய் போற்றி
ஓம் நாரணன் நம்பியே போற்றி
ஓம் விஷ்ணு குபனே போற்றி
ஓம் மோதகம் விரும்புவோய் போற்றி
ஓம் வெள்ளைக் கொம்புடையோய் போற்றி
ஓம் தும்பிக்கை உடையவனே போற்றி
ஓம் துயர்களைபவனே போற்றி
ஓம் லட்சுமிகரம் கொண்டாய் போற்றி''

என்று சொல்லி மஞ்சள் பிள்ளையாருக்குப் போடச் செய்யுங்கள். பிறகு கல்கண்டு, தாம்பூலம் படைத்து,
''வேழமுகத்தோனுக்கு விஷ்வக்சேனனுக்கு வேண்டிய பொருள் வைத்து வினைகளைய தொழுதோம் போற்றி ஓம்''
என்று சொல்லி கற்பூரம் காட்டுங்கள்.

அடுத்ததாக கலச பூஜை செய்ய வேண்டும். துளசி கலந்து மலர்களை 
வைத்துக் கொண்டு,

''ஓம் அச்சுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயண, 
அம்ருத ரோகான் மேநாசய அஷோன் ஆசு தந்வந்தரே ஹரே''

என்று ஒருமுறை சொல்லி, பிறகு குங்குமம் மற்றும் துளசியால் 
தன்வந்தரி பூஜை செய்ய வேண்டும்.

''ஓம் வாசுதேவா போற்றி! ஓம் நாராயணரூபா போற்றி!

ஓம் அமிர்தகலசம் ஏந்தியவரே போற்றி! ஓம் மூவுலகும் காண்பாய் போற்றி!

ஓம் தூய்மை காப்பவரே போற்றி! ஓம் ரோகம் தீர்ப்பவரே போற்றி!

ஓம் சங்கு சக்கர கையோன் போற்றி! ஓம் அழைத்தருள்பவரே போற்றி!

ஓம் ஜடாமகுடதாரணே போற்றி! ஓம் தன்வந்தரி மூர்த்தியே போற்றி!

ஓம் யின் இடமே போற்றி''

என்று சொல்லி ஊதுபத்தி, தூப தீப ஆராதனை செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம் படைத்து துளசி தீர்த்தத்தைக் கையிலெடுத்து, 'ஓம் தன்வந்தரி பகவானுக்கு அர்ப்பணம் ' என்று சொல்லி கற்பூரம் ஆரத்தி செய்யுங்கள்.

ஆரத்தி செய்ததும் குங்குமப் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, உங்கள் உடல் நோய்கள் தீர பெயருடன் இந்த சுலோகத்தை சொல்ல வேண்டும்.

தன்வந்தரி மந்திரம்

''ஓம் நமோபகவதே வாசு தேவாய தன்வந்தரயே
 அம்ருத கலச ஹஸ்தாய
சர்வ ஆமய நாசநாய திரைலோக்ய
நாதாய மகாவிஷ்ணவே நம:
என்று சொல்லி வணங்குங்கள். 

இதன் அர்த்தம் இதுதான்.. 

'எல்லோர்க்கும் வரம் தருபவரும் வாசுதேவராக இருப்பவரும், அமிர்த கலசத்தைக் கையில் ஏந்தியிருப்பவரும், சகலவித நோய்களைத் தீர்க்க மூவுலகத்தைக் காண்பவரும், மகாவிஷ்ணுவாக அவதரித்திருப்பவரும் ஆகிய தன்வந்தரிக் கடவுளே.. உன்னை வணங்குகிறேன். 
எனக்கு வந்திருக்கும் நோய்களை கண்ணுக்குத் தெரியாமல் நீக்குவாயாக'.

அமிர்தகலச பூஜை முடிந்த பிறகு குடும்பத்திலுள்ள நபர்களுக்கு
 அந்தத் தீர்த்தத்தைக் கொடுத்து விட்டு, அதை மூன்று நாட்களுக்கு
 குளிக்கும் நீரில் கலந்து குளிக்க வேண்டும்!
உங்கள் இல்லங்களில் தன்வந்தரி பகவானின் அருள் பெருகி, 
நோய்கள் தீர்ந்து நலம் பெற வாழ்த்துக்கள்!  

No comments:

Post a Comment