Monday, October 6, 2014

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில்
கேரளாவில் குருவாயூரிலும், கர்நாடகாவில் உடுப்பியிலும் ஆந்திராவில் ஐதராபாத், விசாகப்பட்டினத்திலும் கிருஷ்ணஜெயந்தி உற்சாகமாக கொண்டாடப்படுவது போல தமிழ்நாட்டில் மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ராஜகோபாலர் இக்கோவிலில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேட்டி அணிந்து அதையே தலைப்பாகையாகச் சுருட்டி, வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்து காட்சி தருகிறார். 



இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தை அணிகலன்கள் அணிந்திருக்கிறார். உடன் ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன. தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். 

மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்யம் படைக்கப்படுகிறது. இந்த கோவிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன. பொதுவாக ராஜகோபுரத்தில், எல்லா நிலைகளிலும் கதை சிற்பங்கள் இருக்கும். 

ஆனால் இங்குள்ள 11 நிலை ராஜகோபுரத்தில் கீழிருந்து மேலாக முதல் ஆறு நிலைகளில் கதை, சிற்பங்கள் எதுவும் இல்லை. ஏழாவது நிலையில் இருந்தே சுவாமி சிலைகள் வடிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய வித்தியாசமான அமைப்பில் கோபுரத்தை காண்பது அரிது. 

திருவாரூர் தேரழகு என்பது போல் "மன்னார்குடி மதிலழகு'' என்பது சொல் வழக்கமாக உள்ளது. கோவிலில் இருந்து சற்று தூரத்தில் தீர்த்தக்குளம் இருக்கிறது. கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது என்பது ஐதீகம். இதனை யமுனை நதியாகவே கருதுவதால் "ஹித்ரா நதி'' என்றே அழைக்கிறார்கள். 

குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தëத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. தாயார் சன்னதி அருகே பெருமாள் சன்னதி எதிரே பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். ஆனந்த விநாயகர் திருக்கோவில், கைலாசநாதர் கோவில், மீனாட்சி அம்மன்ன திருக்கோவில், காளாவைக்கரை முருகன் கோவில், நீலகண்டேசுவரர் கோவில் முதலியானவும் தனி சிறப்பு வாய்ந்தவை. 

இக்கோவிலில் மூலவர் "வாசுதேவர்'' என்ற பெயரிலும், உற்சவர் ராஜகோபாலசுவாமியாகவும் காட்சி தருகிறார். தினமும் காலையில் வாசுதேவர் சன்னதி திறக்கும்போது பசு, யானைக்கு பூஜை செய்யப்படுகிறது. உற்சவருக்கு ராஜமன்னார் என்றும் பெயர் உண்டு. இப்பெயரே பிரசித்தி பெற்றதால், ஊருக்கும் "மன்னார்குடி'' என்ற பெயர் ஏற்பட்டது. 

கிருஷ்ணரை அழிக்க கம்சன் குவலயாபீடம் என்னும் யானையை ஏவி விட்டான். கிருஷ்ணன், யானையின் தந்தத்தை ஒடித்து அதனை அடக்கினார். இதன் அடிப்படையில் இவர் இடது கையில் தந்தமும் இருக்கிறது. ஒருசமயம் கிருஷ்ணன், யமுனையில் நீராடிக்கொண்டிருந்த கோபியருக்கு இடையே ஒரு போட்டி வைத்தார். 

கோபியர் நீராடிவிட்டு தங்களது ஆடை, ஆபரணங்களை சரியாக அணிந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டி அந்த போட்டி தொடங்கியதும், கிருஷ்ணர், ஒரு கோபியின் கம்மலை எடுத்து அணிந்து கொண்டார். கோபியர்களோ அதைக் கவனிக்காமல் தேடிக் கொண்டே இருந்தனர். 

இறுதியில் கண்ணனின் காதில் அது இருக்கும் அழகைப் பார்த்து நகைத்து, ஆனந்தம் கொண்டனர். இதன் அடிப்படையில் இங்கு ராஜகோபாலர் வலது காதில் குண்டலமும், இடது காதில் தாடங்கமும் அணிந்திருக்கிறார். இவருக்கு பால் பிரதான நைவேத்யமாக படைக்கப்படுகிறது. இதையே பிரசாதமாகவும் தருகின்றனர்.  

பங்குனியில் 18 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. கிருஷ்ணருக்காக அமைந்த கோவில் என்பதால் 18-க்கு முக்கியத்துவம் கொடுத்து இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழா நடக்கும் நாட்களில் கிருஷ்ணனின் 32 லீலைகளில், சுவாமியை அலங்காரம் செய்வது விசேஷம். பிரம்மோற்சவத்தின் 16-ம் நாளில் "வெண்ணை தாழி'' உற்சவம் நடக்கிறது. 

அப்போது சுவாமியை தவழ்ந்த கோலத்தில், கையில் வெண்ணைப் பானையுடன் வீதியுலா செல்கிறார். அந்நேரத்தில் சுவாமிக்கு "வெண்ணையை பிரதான நைவேத்யமாக படைக்கின்றனர். அலங்காரம் முடிந்து இவர், ஊருக்கு உள்ள மண்டபத்திற்கு செல்கிறார். அப்போது வழிநெடுகிலும் பக்தர்கள் இவர் வெண்ணையை வீசுவார்கள். 

இத்தலத்தில் உள்ள பெண் வடிவ கருடாழ்வாருக்கு நெய்தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண தோஷம் புத்திரதோஷம் விலகிவிடும். இங்குள்ள துர்க்கைக்கு ராகு காலத்தில் விசேஷ பூஜை, வழிபாடு நடக்கிறது. புத்திர பாக்கியத்திற்காக தொட்டில் வளையம் கட்டும் வழக்கமும் உள்ளது.

No comments:

Post a Comment