Sunday, October 5, 2014

தேவி மகாத்மியம் - பாகம் 2





    ஆறாவது அத்தியாயம்

    தூம்ரலோசன வதம்

    ரிஷி கூறியது: 1,2.  இங்ஙனம் தேவியின் வார்த்தையைக் கேட்டு அந்த தூதன் கோபத்துடன் அசுர ராஜனிடம் சென்று நடந்ததை விரிவாகத் தெரிவித்தான்.

    3. அந்த தூதனுடைய அவ்வார்த்தையை அசுரராஜன் செவியுற்றுப் பின்னர் கோபங்கொண்டு தைத்திய சேனாதிபதியாகிய தூம்ரலோசனனிடம் பின்வருமாறு கூறினான்.

    4. தூம்ரலோசனா ! உனது சைனியம் புடைசூழ நீ விரைந்து அந்த துஷ்டையைக் கேசகத்தைப்பற்றி யிழுத்து விலவிலக்கும்படி பலாத்காரமாய் இங்கு கொண்டுவா.

    5. வேறு யாராவது அமரனோ,யக்ஷனோ, கந்தர்வனோ,எவனாயினும் சரி, அவளைக் காப்பவனாக நிற்பானெனின், அவன் கொல்லப்படவேண்டும்.

    6,7. அந்த அசுரன் தூம்ரலோசனன் இங்ஙனம் அவனால் கட்டளையிட்டப்பட்டபின் அறுபதினாயிரம் அசுரர்கள் புடை சூழ விரைவில் சென்றான்.

    8. பனிமலைமேல் வீற்றிருந்த அந்த தேவியை அவன் பார்த்து,  சும்ப நிசும்பர்கள் முன்னர் செல்லப் புறப்படு என உறக்கக் கூவினான்.

    9. எனது யஜமானனிடம் நீ பிரீதியாக இப்போது சென்றடையாவிட்டால், பின்னர் கேசத்ததைப்பற்றி யிழுத்து விலவிலக்க உன்னை பலாத்காரமாய் கொண்டு செல்வேன்.

    தேவி கூறியது:  10,11. (நீ) தைத்ய ராஜனால் அனுப்பப்பட்டவன், பலவான், சைனியத்தால் சூழப்பட்டிருக்கின்றாய். பலாத்காரமாக என்னை இப்படியே, கொண்டுபோகப் போகிறாய். அப்படியிருக்க உனக்கு நான் என்ன செய்ய முடியும்?

    12,13. இங்ஙனம் கூறப்பட்ட அவ்வசுரன் தூம்ரலோசனன் அவளை நோக்கிப் பாய்ந்தான். அப்போது அம்பிகை அவனை ஹுங்காரத்தால் சாம்பலாக்கினாள்.

    14. அதன் பின் கோபத்தால் மூண்டெழுந்த அசுரர்களின் பெருஞ்சைனியம் அம்பிகையின் மேல் கூரிய அம்புகளையும், ஈட்டிகளையும், கட்டாரிகளையும் பொழிந்தது.

    15. பின்னர், தேவிக்கே சொந்த வாகனமாகிய சிங்கம் கோபத்தால் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டும் பயங்கரமாய்க் கர்ஜித்துக் கொண்டும் அசுர சேனையின் மேல் பாய்ந்தது.

    16. சில அசுரர்களை முன்னங்காலால் அறைந்தும், சிலரை வாயால் (கவ்வியும்), பிறரைப் பின் கால்களால் மிதித்தும் வலிமிக்க அசுரர்களைக் கொன்று முடிந்தது.

    17. அச்சிங்கம் சிலருடைய வயிற்றை நகங்களால் கிழித்தது; அவ்வாறே முன்னங்காலால் அறைந்து சிரங்களைத் துணித்து வீழ்த்தியது.

    18. இன்னும் சிலர் அவ்வாறே அச்சிங்கத்தால் தோள்களும் சிரங்களும் இழந்தவர்களாகப்பட்டனர். வேறு சிலருடைய வயிற்றினின்று பெருகிய ரத்தத்தைப் பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு அது குடித்தது.

    19. ஒரு கணத்தில் அந்தச் சேனை முழுவதும் கடுங்கோபங்கொண்ட தேவியின் வாகனமும் மகாத்மாவுமான அந்தச் சிங்கத்தால் நாசமாக்கப்பட்டது.

    20,21. தூம்ரலோசனாசுரன் தேவியினால் கொல்லப்பட்டான் என்றும் சேனைமுழுவதும் தேவியின் சிங்கத்தால்  அழிக்கப்பட்டதென்றும் கேள்வியுற்று, அசுரராஜனான சும்பன் கோபங்கொண்டு உதடு துடிக்கச் சண்டன் முண்டன் என்ற அசுர சிரேஷ்டர்களை அழைத்துப் பின்வருமாறு கட்டளையிட்டான்.

    22. சண்டா ! முண்டா ! பலவகைச் சேனைகள் புடைசூழ அங்கு செல்லுங்கள். சென்று விரைவில் அவளைக் கொண்டுவர வேண்டும்.

    23. கேசத்தைப்பற்றியிழுத்தோ, கட்டியோ (கொண்டு வாருங்கள்). அதில் ஏதாவது ஸம்சயம் ஏற்பட்டால் யுத்தத்தில் ஆயுதங்களைக்கொண்டு எல்லா அசுரர்களாலும் அவள் கொல்லப்படலாம்.

    24.அந்த துஷ்டை வீழ்த்தப்பட்டுச் சிங்கமும் வீழ்த்தப்பட்டபின் விரைவில் திரும்பி வாருங்கள். அல்லது கூடுமானால் அம்பிகையைப் பிடித்துக்கொண்டு வாருங்கள்

    ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமாஹாத்மியத்தில் ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.

    ஏழாவது அத்தியாயம்

    சண்டமுண்டர்கள் வதம்

    (ஓம்) ரிஷி கூறியது: 1,2. அங்ஙனம் கட்டளையிடப்பட்ட சண்டமுண்டர்கள் முன் செல்லச் சதுரங்க சேனைகளுடன் ஆயுதபாணிகளாய் அசுரர்கள் புறப்பட்டனர்.

    3. மலையரசின் பொன்மயமான பெரிய சிகரத்தில் சிங்கத்தின் மேல் புன்முறுவலுடன் வீற்றிருந்த தேவியை அவர்கள் கண்டனர்.

    4. அவளைக்கண்டு அவர்கள் (சிலர்) பரபரப்புடன் (அவளை)பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். வில்லை வளைத்துக்கொண்டும், வாளை உருவிக்கொண்டும் மற்றும் சிலர் அவளை நெருங்கினர்.

    5. அப்போது அம்பிகை அவ்வெதிரிகளை நோக்கிக் கோபத்தின் <உச்சநிலையடைந்தாள். கோபத்தால் அவளுடைய முகம் அப்போது மைவண்ணமாயிற்று.

    6. புருவ நெரிப்புடன் கூடிய அவளுடைய நெற்றித் தலத்திலிருந்து விரைவில் பயங்கரமான முகமுடைய காளியானவள் கத்தியும் பாசமும் கைக்கொண்டு வெளிப் போந்தாள்.

    7. விசித்திரமான கட்வாங்கத்தை ஏந்திக்கொண்டு நரமாலையை பூஷணமாயணிந்து, வரிப்புலியின் தோலை ஆடையாய்க்கொண்டு, உடலில் மாம்ஸம் உலர்ந்து மிகவும் பயங்கரமான தோற்றத்துடன் ;

    8. நாக்குச் சுழல்வதால் பயங்கரமாயிருக்கும் அகன்ற வாயுடன், குழிந்தும் சிவந்ததுமான கண்களுடன், தனது கர்ஜனையால் திக்கு முதலியவைகளை நிரப்புபவளாய்;

    9. அந்த தேவசத்துருக்களின் சைனியத்தில் அவள் வேகமாய்ப் புகுந்து வலிமிக்க அசுரர்களைக் கொன்று அந்தச் சேனையைப் பக்ஷித்தாள்.

    10. யானைப்படையின் பின்புறமிருந்தவர்,யானைப்பாகர்கள்,போர் வீரர்கள் மணிகள் எல்லாவற்றுடனும் யானைகளை ஒரே கையால் வாரி விழுங்கினாள்.

    11. அவ்வாறே குதிரைப்படைகளையும் குதிரைகள், தேர், ஸாரதிகளுடன் வாயில் போட்டுக்கொண்டு மிகவும் பயங்கரமாகப் பற்களால் மென்றாள்.

    12. ஒருவனைக் கேசத்தால் பிடித்தாள்; மற்றொருவனைக் கழுத்தால் பிடித்தாள்; இன்னொருவனைக் காலால் மிதித்து வதைத்தாள்; மற்றும் ஒருவனை உரத்தால் உந்தி வீழ்த்தினாள்.

    13. அவ்வசுரர்களால் விடப்பட்ட சஸ்திரங்களையும் மகா அஸ்திரங்களையும் தன் வாயில் வாங்கிக்கொண்டு கோபத்துடன் மென்றாள்.

    14. வலியவர்களும் கொடியவர்களுமான அவ்வசுரர்களின் சேனை முழுவதையும், சிலவற்றை அடித்து வீழ்த்தியும் சிலவற்றை எடுத்து விழுங்கியும் அவள் அழித்தாள்.

    15. சிலர் வாளால் கொல்லப்பட்டனர்; சிலர் ! கட்வங்கத்தால் தாக்கி வீழ்த்தப்பட்டனர்; பற்களின் நுனிகளில் அரைக்கப்பட்டு அவ்வாறே (சில) அசுரர்கள் நாசமடைந்தனர்.

    16. அசுரர்களின் அச்சேனை முழுதும் ஒரு கணத்தில் வீழ்த்தப்பட்டதைக் கண்டு சண்டன் மிகவும் பயங்கர வடிவு கொண்ட அக்காளி தேவியை நோக்கி ஓடினான்.

    17. அம்மகாசுரன் பயங்கரமான பார்வையுடைய அந்த தேவியை மிக்க பயங்கரமான அம்புகளைப் பொழிந்து மறைத்தான். முண்டன் ஆயிரக்கணக்கான சக்கரங்களை எய்தி (மறைத்தான்).

    18. அநேக சக்கரங்கள் அவள் வாயில் புகுந்தது பல சூரிய பிம்பங்கள் மேகத்தினிடை புகுந்தாற்போலிருந்தது.

    19. அப்போது காளி பயங்கரமாய் கர்ஜித்துக் கொண்டு, மிகுந்த கோபத்துடன் பயங்கரமான வாயினுள் பார்க்கக் கூசும்படி ஜ்வலிக்கும் பற்களுடன் பயங்கரமாய் சிரித்தாள்.

    20. தேவியானவள் பெருமைமிக்க சிங்கத்தின் மீது ஏறிக் கொண்டு சண்டன்மேல் பாய்ந்தாள். அவனைக் கேசத்தால் பிடித்து அவன் தலையைத் தன் வாளால் சேதித்தாள்.

    21. சண்டன் விழுந்ததைக்கண்டு முண்டன் அவள்மேல் பாய்ந்தான். அவள் கோபத்துடன் அவனையும் வாளால் வெட்டி பூமியில் வீழ்த்தினாள்.

    22. கொன்றதுபோக எஞ்சிய சைனியம் சண்டனும் மகா வீரியவனான முண்டனும் வீழ்த்தப்பட்டதைக் கண்ணுற்று பயத்தால் நடுங்கி நாற்றிசைகளிலும்  ஓடிற்று.

    23. காளியோ சண்டனுடைய சிரத்தையும், (முண்டனுடைய) முண்டத்தையும் எடுத்துக்கொண்டு சண்டிகையிடம் உரத்த அட்டஹாஸத்துடன் கலந்த வார்த்தைகளைக் கூறினாள்.

    24. இந்த யுத்தமாகிய யாகத்தில் சண்ட முண்டர்களாகிய பெரிய பிராணிகள் இரண்டும் என்னால் (கொல்லப்பட்டு) இதோ உன்னிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டன, இனி நீயே சும்பனையும் நிசும்பனையும் கொல்லப் போகிறாய்.

    ரிஷி கூறியது: 25-27. அசுர வீரர்களான சண்ட முண்டர்கள் அவ்வாறு (கொன்று) கொண்டு வரப்பட்டதைக் கண்ணுற்றுச் சண்டிகையானவள் காளியை நோக்கி  தேவி ! சண்டனையும் முண்டனையும் (முண்டமாக்கி) நீ  எடுத்துக்கொண்டு வந்ததால் சாமுண்டா என உலகில் பிரசித்தி அடையப் போகின்றாய்  என மதுர மொழியில் கூறினாள்.

    ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமாஹாத்மியத்தில் ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.

    எட்டாவது அத்தியாயம்

    ரக்தபீஜ வதம்

    ரிஷி கூறியது:  1-3. சண்டனுங் கொல்லப்பட்டு முண்டனும் வீழ்த்தப்பட்டு, சைனியமும் வெகுவாக நாசமாக்கப்பட்டபின் பிரதாபம்மிக்க அசுர ராஜனான சும்பன் கோபத்தால் மதிகெட்டு, அசுரர் சேனைகள் அனைத்தையும் திரட்ட உத்திரவிட்டான்.    

    4. இப்போதே (முக்கிய வீரர்களான) எண்பத்தாறு அசுரர்களும் எல்லாச் சேனைகளுடனும்,கம்புகுல வீரர்கள் எண்பத்திநான்கு பேர்களும் தங்கள் சேனைகளால் சூழப்பெற்றும் புறப்படட்டும்.

    5. கோடிவீரர்கள் எனப்பட்ட அசுரர்களின் ஐம்பது குலத்தினரும்,எனது கட்டளைப்படி புறப்பட்டுச் செல்லட்டும்.   

    6. மற்றும் காலகர், தௌர்ஹ்ருதர், மௌரியர், காலகேயர் என்ற அசுரர்களும் யுத்தத்திற்குத் தயாராக விரைவில் என் கட்டளைப்படி செல்லட்டும்.

    7. கடுமையாய்க் கட்டளையிடும் அசுர ராஜனான சும்பனும் இவ்வாறு கட்டளையிட்டுவிட்டுப் பல்லாயிரக் கணக்கில் பெருஞ்சைனியங்கள் சூழப்புறப்பட்டான்.

    8. மிகவும் பயங்கரமான அந்தச் சேனை வருவதைக் கண்ட சண்டிகை நாணொலியால் பூமியையும் வானவெளியையும் நிரப்பினாள்.   

    9. அரசே ! பின்னர் சிங்கமானது மிகவும் உரக்க கர்ஜனை செய்தது. மணியோசையால் அந்த நாதத்தை அம்பிகை மேலும் வளரச் செய்தாள்.

    10. காளிதேவி வாயை அகலத் திறந்து செய்த பயங்கரமான சப்தத்தால் திக்குத்திசைகளை நிரப்புபவளாய் வில்லின் நாணொலி,சிங்கநாதம், மணியோசையாகியவற்றையும் மீறினாள்.

    11. அவ்வொலியைக் கேட்டு அசுர சைனியங்கள் (சண்டிகா) தேவியையும் சிங்கத்தையும் காளிதேவியையும் கோபத்துடன் நாற்புறமும் சூழ்ந்து கொண்டன.

    12,13. அரசே ! அதே சமயத்தில் தேவ சிரேஷ்டர்களின் நன்மைக்காகவும், தேவசத்துருக்களின் நாசத்திற்காகவும், பிரம்மா, ஈசுவரன், குகன், விஷ்ணு, இந்திரன் முதலியவர்களின் சக்திகள் பலமும் வீரியமும் மிக்கவர்களாய் அவர்கள் சரீரங்களினின்று வெளிப்போந்து அவரவர்கள் வடிவில் சண்டிகையையடைந்தனர்.

    14. எந்த தேவனுக்கு எந்த வடிவமோ,எவ்வகை பூஷணமோ,வாகனமோ அதேமாதிரி அந்த சக்தி அசுரர்களுடன் போருக்குச் சென்றாள்.

    15. ஹம்ஸத்துடன் கூடிய விமானத்தின் மேல் அக்ஷமாலையும் கமண்டுலுவும் ஏந்தி எழுந்தருளிய பிரம்ம சக்தி பிரம்மாணீ எனப்படுகின்றாள்.

    16. விருஷபத்தின் மேல் வீற்றுச் சிறந்த திரிசூலமேந்தி, சிறந்த ஸர்ப்பங்களைத் தோள்வளைகளாய்க் கொண்டு சந்திர கலையால் அலங்கரிக்கப் பெற்று மாஹேசுவரி எழுந்தருளினாள்.

    17. தைத்தியர்களுடன் போர் புரிவதற்குச் சக்தியைக் கையிலேந்தி, மயில் வாகனத்தில் குக வடிவினளான அம்பிகை கௌமாரீ எழுந்தருளினாள்,

    18. அவ்வாறே வைஷ்ணவீ சக்தியும் கருடன்மேல் வீற்றுச் சங்கம் கதை சார்ங்கம் வாள் ஆகியவற்றைக் கைக்கொண்டு தோன்றினாள்.

    19. ஹரியின் ஒப்புயர்வற்ற யஜ்ஞவாராஹ வடிவத்தை எடுத்துக்கொண்ட சக்தி எவளோ அவளும் அங்கு வாராஹீ வடிவு தாங்கி வந்து சேர்ந்தாள்.

    20. நரசிம்மத்திற்கொப்பான உடல் தாங்கிக்கொண்டு பிடரியின் சிலிர்ப்பால் நக்ஷத்திரக் கூட்டங்களை உலுக்கிக் கொண்டு அங்கு நாரசிம்மீ வந்தாள்.

    21. யானையரசின்மேல் வீற்று இந்திரன் எவ்வண்ணமோ அவ்வண்ணமே ஆயிரங்கண்ணுடன் வஜ்ராயுதமேந்தி ஐந்ந்ரீ தேவி வந்தாள்.

    22. பின்னர் ஈசானன் அந்த தேவ சக்திகளால் சூழப் பெற்றவராய் என் பிரீதிக்காக விரைவில் அசுரர்கள் கொல்லப்படட்டும்  என்று சண்டிகையை நோக்கிக் கூறினார்.

    23. அதன் பின் தேவியின் சரீரத்தினின்று மிக்க பயங்கரமானவளும், நூறு நரிகளைப் போல் சப்திப்பவளும் , மிகவும் உக்கிரமானவளும் ஆகிய சண்டிகா (கௌசிகீ) தேவியின் சக்தி (சிவதூதீ) தோன்றினாள்.

    24. அந்த ஜயிக்கமுடியாத சக்தியானவள் செஞ்சடைச் சிவனிடம் ஈசனே ! சும்ப நிசும்பர்களிடம் தாங்கள் தூதுவராய்ச் செல்ல வேண்டும்.

    25. கர்வம் மிக்க அசுரர்களாகிய சும்பனிடமும் நிசும்பனிடமும், அங்கு யுத்தத்திற்காகக் கூடியிருக்கும் மற்ற அசுரர்கள் எவர்களோ அவர்களிடமும் (இதை) சொல்ல வேண்டும்.

    26.  இந்திரன் மூவுலக ஆட்சியை (மீண்டும்)பெற வேண்டும். தேவர்கள் யஜ்ஞபாகங்களைப் புசிப்பவர்களாக வேண்டும். நீங்கள் உயிருடனிருக்க விரும்பினால்  பாதாளம் செல்ல வேண்டும்.

    27. ஆனால் பலத்தின் கொழுப்பால் நீங்கள் யுத்தத்தை விரும்புவீர்களெனின், அப்போது வரலாம். என்னுடைய நரிகள் உங்களுடைய மாமிசத்தால் திருப்தியடையட்டும்.

    28. (கௌசிகியிடமுண்டான) அந்த தேவியால் சிவனே தூது செல்லுதலில் ஏவப்பட்டமையால் அதுமுதல் இவ்வுலகில் அவள் சிவதூதீ எனப் பிரக்கியாதி யடைந்தாள்.

    29. அம்மகா அசுரர்களே சிவன் கூறிய தேவியின் மொழிகளைக் கேட்டுக் கோபமுண்டு காத்யாயனீ (கௌசிகீ) இருந்த இடத்தை நாடிச் சென்றனர்.

    30. அத்தேவ சத்ருக்கள் கோபமேலீட்டால் ஆரம்பத்திலேயே முதன் முதலாக அந்த தேவியை நோக்கி அம்பு ஈட்டி வாள் இவற்றை மழைபோல் பொழிந்தனர்.

    31. அவளோ அங்ஙனம் எறியப்பட்ட அம்புகளையும் சூலங்களையும், ஈட்டிகளையும் பரசுகளையும் தன் வில்லினின்று விளையாட்டுப்போல் விட்ட சிறந்த அம்புகளால் பிளந்து வீழ்த்தினாள்.

    32. அவ்வாறே காளிதேவி அவன் (அந்தச் சும்பன்) முன்னிலையிலேயே சூலத்தால் பிளக்கப்பட்ட எதிரிகளைக் கட்வாங்கத்தால் நசுக்கிக்கொண்டு உலவி வந்தாள்.

    33. பிரம்மாணியானவள் எங்கேங்கு சென்றாலும் அங்கங்கு தன் கமண்டலு ஜலத்தைத் தெளித்துச் சத்துருக்களை வீரியமற்றவர்களாகவும், களையற்றவாளாகவும் செய்தாள்.

    34. மிகவும் கோபங்கொண்ட மாஹேசவரீ திரிசூலத்தாலும், அவ்வாறே வைஷ்ணவீ சக்கரத்தாலும், கௌமாரீ ஈட்டியாலும் அசுரர்களை வதைத்தனர்.

    35. ஐந்திரியின் வஜ்ராயுதத்தின் தாக்குதலால் பிளவுண்டு ரத்த வெள்ளத்தைப் பெருக்கிக் கொண்டு நூற்றுக் கணக்கான தைத்தியர்களும் தானவர்களும் பூமியில் வீழ்ந்தனர்.

    36. வாராஹமூர்த்தியின் மூக்கால் தாக்கப்பட்டும் தெற்றிப் பல்லால் மார்பு கிழிக்கப்பட்டும் சக்கரத்தால் பிளக்கப்பட்டும் (அசுரர்கள்) வீழ்ந்தனர்.

    37. நாரசிம்மியானவள் நகங்களால் ஏனையோரைக் கிழித்துக்கொண்டும்,பெரிய அசுரர்களைப் பக்ஷித்துக்கொண்டும், தனது கர்ஜனையால் ஆகாயத்தையும் திசைகளையும் நிரப்பிக்கொண்டும் யுத்த பூமியில் உலவினாள்.

    38. சிவதூதியின் பிரசண்டமான அட்டஹாஸத்தால் பயந்து அசுரர்கள் பூமியில் வீழ்ந்தார்கள்; வீழ்ந்த அவர்களை அப்போதே அவள் தின்று ஒழித்தாள்.

    39. கோபமூண்ட மாத்ரு கணங்கள் மகா அசுரர்களை பலமுறைகளில் வதைப்பதைக் கண்டு தேவ சத்துருக்களின் சைனியத்தைச் சார்ந்தவர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

    40. மாத்ரு கணங்களால் பீடிக்கப்பட்டு ஓடுவதில் முனைந்த அசுரர்களைக்கண்டு ரக்தபீஜன் என்ற மகா அசுரன் கோபத்துடன் யுத்தஞ்செய்ய வந்து சேர்ந்தான்.

    41. அவனுடைய சரீரத்திலிருந்து ஒரு துளி ரத்தம் பூமியில் விழுந்தால் அப்போது  பூமியிலிருந்து அவனைப்போல் உருக்கொண்ட ஒரு அசுரன் உதித்தான்.

    42. அம்மகா அசுரன் கதை ஏந்தி இந்திரசக்தியுடன் யுத்தம் செய்தான். அப்போது இந்திரசக்தி தனது வஜ்ரத்தால் ரக்தபீஜனை அடித்தாள்.

    43. வஜ்ரத்தாலடியுற்ற அவனிடமிருந்து வெகுவாக ரத்தம் விரைந்து பெருகிற்று. அதினின்று அவனைப்போலவே வடிவமும் வலிமையும் வாய்ந்த யுத்த  வீரர்கள் கிளம்பினார்கள்.

    44. அவன் சரீரத்திலிருந்து எத்தனை ரத்தத்துளிகள் விழுந்தனவோ அத்தனை புருஷர்கள் அவனைப்போல் வீரியமும் பலமும் உடையவர்களாய்த் தோன்றினர்.

    45. ரத்தத்தில் தோன்றிய அப்புருஷர்களும் அங்கு மாத்ரு தேவதைகளுக்குச் சமமாக சஸ்திரங்களை எய்தி மிகவும் உக்கிரமாகவும் பயங்கரமாகவும் யுத்தம் செய்தனர்.

    46. மற்றொரு முறை அந்த ரக்த பீஜனுடைய தலை வஜ்ராயுதத்தின் தாக்குதலால் காயமடைந்தபோது, ரத்தம் பெருகிற்று. அதனின்று ஆயிரக்கணக்கான புருஷர்கள் உண்டாயினர்.

    47.வைஷ்ணவீ தேவி போரில் சக்ராயுதத்தால் அந்த ரக்தபீஜனை அடித்தாள். ஐந்த்ரீ அவ்வசுரராஜனைக் கதையால் அடித்தாள்.

    48. வைஷ்ணவீ சக்ரத்தால் பிளவுண்ட அவனிடமிருந்து பெருகிய ரத்தத்தில் தோன்றியவர்களும் அவன் போன்ற வடிவுடையவர்களுமான ஆயிரக்கணக்கானவர்களால் உலகமே வியாபிக்கப்பட்டது.

    49. கௌமாரீ தேவி சக்தி ஆயுதத்தாலும் வாராஹீ அவ்வாறே வாளாலும், மாஹேசுவரீ திரிசூலத்தாலும் மகா அசுரனாகிய ரக்தபீஜனை அடித்தனர்.

    50. கோபாவேசங்கொண்ட தைத்தியனும் மகா அசுரனுமான அந்த ரக்தபீஜனும் கதையால் மாத்ருதேவதைகள் ஒவ்வொருவரையும் அடித்தான்.

    51. சக்தி சூலம் முதலியவற்றில் பலவாறாக அடிக்கப்பட்ட அவனிடமிருந்து பூமியில் வீழ்ந்த ரத்த வெள்ளம் எதுவோ அதினின்று நூற்றுக்கணக்கில் அசுரர்கள் உண்டாயினர் .

    52. அவ்வசுரனுடைய ரத்தத்திலிருந்து தோன்றின அப்பேர்ப்பட்ட அசுரர்ளால் உலகு முழுதும் வியாபிக்கப்பட்டது. அதனால் தேவர்கள் மிகவும் அதிகமாக பயத்தையடைந்தனர்.

    53,54. யுத்தத்தில் ஆவேசத்துடன் கூடிய சண்டிகை கவலைகொண்ட அந்த தேவர்களைக் கண்ணுற்றுக் காளியிடம் கூறியதாவது: சாமுண்டே ! உன் வாயை அகலத் திறந்து கொள். ரத்த பிந்துக்களினின்றுண்டான மகா அசுரர்களையும் எனது சஸ்திரங்களின் தாக்குதலால் உண்டாகும் ரத்த பிந்துக்களையும் விரைவில் இந்த வாயால் ஏற்றுக் கொள்வாய்

    55. அவனிடமிருந்து (ரக்தபீஜனிடமிருந்து) தோன்றிய மகா அசுரர்களை விழுங்குபவளாய் நீ ரணகளத்தில் சஞ்சரிக்க வேண்டும். அதனால் இந்த தைத்தியன் ரத்தத்தை யெல்லாமிழந்து நாசமடைவான்.

    56. (இங்ஙனம்) உன்னால் விழுங்கப்பட்டால் வேறு அசுரர்கள் உண்டாக மாட்டார்கள் என அவளிடம் கூறி தேவியானவள் சூலத்தால் அவனை (ரக்தபீஜனை) அடித்தாள்.

    57. ரக்தபீஜனுடைய ரத்தத்தைக் காளியானவள் வாயில் ஏந்தினாள். அப்போது அங்கே அவன் சண்டிகையைக் கதையால் அடித்தான்.

    58,59. அந்தக் கதையின் தாக்குதல் அவளுக்கு ஒரு சிறிதும் வேதனை செய்யவில்லை. அடிபட்ட அவனுடைய உடலினின்று ரத்தம் வெகுவாக எங்கெங்கு பெருகியதோ அங்கெல்லாம் அதைச் சாமுண்டாதேவி வாயில் ஏற்றுக் கொள்ளுகிறாள். இந்த யுத்தத்தின் முதலில் ரத்த வீழ்ச்சியால் தோன்றிய மகா அசுரர்கள் எவர்களோ அவர்களைத் தின்று விட்டு சாமுண்டா அந்த ரக்தபீஜனுடைய ரத்தத்தைக் குடித்தாள்.

    60. சாமுண்டா தேவி ரத்தத்தைக் குடிக்கையில், (கௌசிகீ) தேவியானவள் ரக்தபீஜனை சூலத்தாலும் வஜ்ரத்தாலும் பாணங்களாலும், கத்திகளாலும், ஈட்டிகளாலும் அடித்தாள்.

    61. அரசே ! ஆயுதக் கூட்டங்களால் அடிபட்ட அந்த மகா அசுரனாகிய ரக்தபீஜன் ரத்தமே இல்லாதவனாய்ப் பூதலத்தில் வீழ்ந்தான்.

    62. அரசே ! அப்போது தேவர்கள் நிகரற்ற மகிழ்ச்சியடைந்தனர்.

    63. பரதேவதையிடம் தோன்றிய மாத்ரு கணங்கள் ரத்தத்தால் மதோன்மத்தர்களாய் அவர்களிடையே கூத்தாடினார்கள்.

    ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமாஹாத்மியத்தில் எட்டாவது அத்தியாயம் முற்றிற்று.

    ஒன்பதாவது அத்தியாயம்

    நிசும்ப வதம்

    அரசன் கூறியது: 1,2. ஐயனே ! இந்த ரக்தபீஜவதத்தைப் பற்றிய தேவீ மாஹாத்மிய சரிதம் தேவரீரால் எனக்கு எடுத்துரைக்கப்பட்டது அற்புதமாயிருக்கிறது.

    3. ரக்தபீஜன் வீழ்த்தப்பட்டபின் அதிகமாய்க் கோபங்கொண்ட சும்பனும் நிசும்பனும் என்ன காரியம் செய்தனர் என்பதை மேலும் கேட்க விரும்புகிறேன்.

    ரிஷி கூறியது: 4,5. ரக்தபீஜன் வீழ்ச்சியுற்று மற்றவர்களும் யுத்தத்தில் கொல்ப்பட்டபின் சும்பாஸுரனும் நிசும்பனும் நிகரற்ற கோபத்தை யடைந்தனர்.

    6. பெருத்த சைனியம் அழிக்கப்பட்டதைக் கண்ணுற்றுக் கோபாவேசத்துடன் நிசும்பன் முக்கியமான அரசு சேனைகளுடன் முனைந்து சென்றான்.

    7. அவனுக்கு முன்னும் பின்னும் பக்கங்களிலும் கோபத்தால் உதடுகளைக் கடித்துக்கொண்டு தேவியைக் கொல்லும் பொருட்டுக் கொடிய அசுரர்கள் சென்றனர்.

    8. மகாவீரியவானான சும்பனும் தனது சேனாபலத்தால் சூலப்பட்டு மாத்ரு தேவதைகளுடன் யுத்தம் செய்துவிட்டுச் சண்டிகையைக் கொல்ல எண்ணி முற்பட்டான்.

    9. மேகத்திடையிருந்து மழை பொழிவது போல் மிகவுங் கடுமையாக அம்புகளைப் பொழியும் சும்ப நிசும்பர்களுக்கும் தேவிக்கும் கொடிய யுத்தம் ஆரம்பமாயிற்று.

    10. அவர்களால் விடப்பட்ட அம்புகளைச் சண்டிகை தன் அம்புக் கூட்டங்களால் பிளந்தாள்; அவ்வசுரபதிகளைத் தனது ஆயுதக் கூட்டங்களால் அங்கங்களில் அடித்தாள் .

    11. நிசும்பன் கூரிய வாளையும் பிரகாசமான கேடயத்தையும் எடுத்துக்கொண்டு தேவியின் உத்தம வாகனமாகிய சிங்கத்தைத் தலையில் அடித்தான் .

    12. வாகனம் அடிக்கப்பட்டதும் தேவியானவள் கூரிய பாணத்தால் நிசும்பனுடைய சிறந்த வாளையும் அஷ்ட சந்திரப் பிரபையுடன் கூடிய கேடயத்தையும் துண்டித்தாள்.

    13. கேடயமும் கத்தியும் துண்டிக்கப்பட்டதும், அவ்வசுரன் ஈட்டியை எய்தினான். தன்னை நோக்கிவந்த அதையும் சக்கரத்தால் (தேவி) இரண்டு துண்டாக்கினாள்.

    14.பின்னர் கோபங்கொண்டு நிசும்பாசுரன் சூலத்தை எடுத்தான். அது வரும்போதே தேவியானவள் முஷ்டியால் குத்திப் பொடியாக்கினாள்.

    15. அதன்மேல் அவன் கதையைச் சுழற்றிச் சண்டிகையை நோக்கி எறிந்தான். அது தேவியின் திரிசூலத்தால் உடைபட்டுச் சாம்பலாயிற்று.

    16. பின்பு பரசுவைக் கைக்கொண்டு எதிர்த்த அந்த அசுர சிரேஷ்டனைப் பாணக் கூட்டங்களால் அடித்துப் பூமியில் வீழ்த்தினாள்.

    17. பயங்கரமான பராக்கிரமம் படைத்த சகோதரனாகிய நிசும்பன் தரையில் சாய்ந்ததும், மிகவும் அதிகமாய்க் கோபங்கொண்டு (சும்பன்) அம்பிøகையைக் கொல்லுவதற்கு முற்போந்தான்.

    18. தேரின்மேல் நின்றுகொண்டு மிகவும் உயரத்தூக்கிய நிகரற்ற எட்டுக் கைகளிலும் சிறந்த ஆயுதங்களைப் பிடித்துக்கொண்டு ஆகாயத்தையே மிச்சமில்லாமல் வியாபித்தவன் போல் தோன்றினான்.

    19. அவன் வருவதைக் கண்டு தேவி சங்கநாதம் செய்தாள்; சகிக்கொணாத வில்லின் நாணொலியையுங் கிளப்பினாள்.

    20. எல்லா தைத்திய சைனியங்களின் வீரியத்தையு மழிக்கும் வகையில் தன் மணியின் ஓசையால் (தேவி) திசைகளை நிரப்பினாள்.

    21. பின்பு சிங்கம் தனது உரத்த கர்ஜனையால் யானைகள் (பயந்து) மத ஜலத்தைப் பெருக்கும்படி செய்துகொண்டு பூமியையும் ஆகாயத்தையும் பத்துத் திசைகளையும் நிரப்பிற்று.

    22. பின்பு காளி கிளம்பி ஆகாயத்தையும் பூமியையும் கைகளால் அறைந்தாள். அந்த நாதத்தில் முன்னிருந்த ஒலிகள் மறைந்தன.

    23. சிவதூதீ அமங்களமான கொடிய அட்டஹாஸம் செய்தாள். அந்த சப்தத்தால் அசுரர்கள் நடுங்கினர். சும்பன் கடுமையான கோபத்தை யடைந்தான்.

    24. அம்பிகையானவள் (சும்பனைப் பார்த்து) தீமையே உருக்கொண்டவனே! நில்! நில்!  என்று எப்போது கூறினாளோ அப்போது வான வெளியில் நின்ற தேவர்களால் ஜய  எனும் முழ்க்கத்துடன் போற்றப்பட்டாள்.

    25. அங்கு வந்து நெருப்புக் குவிந்தாற்போல் கடுமையாய் ஜ்வலிக்கும் எந்த சக்தி ஆயதம் சும்பனால் விடப்பட்டதோ அது வருகையில் பெரிய வால்நக்ஷத்திரம் போன்றதொரு அஸ்திரத்தால் (தேவியால்) அழிக்கப்பட்டது.

    26. அரசே ! சும்பனுடைய சிங்கநாதத்தால் மூவுலகங்களின் இடைவெளி நிறைந்தது; ஆனால் (தேவியின்) கோரமான இடிமுழக்கம் அதை மீறி நின்றது.

    27. நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கலும் சும்பன் விட்ட அம்புகளை தேவியும்,தேவி விட்ட அம்புகளைச் சும்பனும் சேதித்தனர்.

    28. அதன்பின் சண்டிகை கோபங்கொண்டு சூலத்தால் அவனை அடித்தாள். அங்ஙனம் அடிக்கப்பட்ட அவன் மூர்ச்சித்து பூமியில் சாய்ந்தான்.

    29. பின்னர் நிசும்பன் மூர்ச்சை தெளித்து வில்லை எடுத்துக்கொண்டு, அம்புகளால் (சண்டிகா) தேவியையும், காளி தேவியையும், சிங்கத்தையும் அடித்தான்.

    30. திதி புத்திரனான அசுரராஜன் ஆயிரங் கைகளைத் தோற்றுவித்துக் கொண்டு ஆயிரம் சக்ராயுதங்களால் சண்டிகையை மறைத்தான்.

    31. பின்னர் கடக்க முடியாத கஷ்டத்தைப் போக்குவிக்கும் பகவதீ துர்க்காதேவி கோபங்கொண்டு அச்சக்கரங்களையும் (அவன் விட்ட) பாணங்களையும் தனது பாணங்களால் சேதித்தாள்.

    32. அதன்பின் நிசும்பன் கதையை எடுத்துக்கொண்டு தைத்தியசேனைகள் சூழ வேகமாகச் சண்டிகையைக் கொல்வதற்குப் பாய்ந்தான்.

    33. பாயும்போதே விரைவில் சண்டிகை அவனுடைய கதையைக் கூரிய முனையுள்ள வாளால் பிளந்தாள் ; அவன் சூலத்தை எடுத்துக் கொண்டான்.

    34. சூலத்தைக் கையிற்கொண்டு எதிர்த்த தேவர்களின் பீடையாகிய நிசும்பனைச் சண்டிகை வேகமாய் எய்யப்பட்ட தனது சூலத்தால் இருதயத்தில் பிளந்தாள்.

    35. சூலத்தால் பிளக்கப்பட்ட அவனுடைய இருதயத்திலிருந்து மகாபலசாலியும் மகாவீரியவானுமான மற்றொரு புருஷன்  நில்  என்று சொல்லிக்கொண்டு வெளிப் போந்தான்.

    36. தேவியானவள் அப்போது உரக்கச் சிரித்துக் கொண்டு அவ்வாறு வெளிப் போந்தவனுடைய தலையைக் கத்தியால் வெட்டினாள். அதனால் அவன் பூமியில் விழுந்தான்.

    37. பின்னர் சிங்கமும் பற்களால் பிளவுண்ட கழுத்தினரான அவ்வசுரர்களை உக்கிரமாகத் தின்றது. அவ்வாறே காளியும் சிவதூதியும் பிறரைத் தின்றனர்.

    38. கௌமாரியின் சக்தி ஆயுதத்தால் பிளவுண்டு சில பெரிய அசுரர்கள் நாசமடைந்தனர். பிரம்மாணியின் மந்திர பாவனமான (கமண்டுலு)ஜலத்தால் மற்றும் சிலர் நிராகரிக்கப்பட்டனர்.

    39. மகேசுவரியின் திரிசூலத்தால் பிளவுண்டு அவ்வாறே சிலர் வீழ்ந்தனர்.வாராஹியின் நாசி முனையால் தாக்கப்பட்டுச் சிலர் பூமியில் தள்ளிப் பொடியாக்கப்பட்டனர்.

    40. வைஷ்ணவியின் சக்கரத்தால் சில தானவர்கள் துண்டந் துண்டமாக வெட்டப்பட்டனர். மற்றுஞ் சிலர் அவ்வாறே ஐந்த்ரியின் நுனிக்கையினின்று வஜ்ராயுதத்தால் (வெட்டப்பட்டனர்)

    41. (மீதியிருந்தவர்களில் தாங்களாகவே) பயத்தால் சில அசுரர்கள் மாண்டனர்; சிலர் மகாயுத்தத்தினின்று காணாமற்போயினர்; பிறர் காளியாலும் சிவதூதியாலும் சிங்கத்தாலும் பக்ஷிக்கப்பட்டனர்.

    ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமாஹாத்மியத்தில் ஒன்பதாவது அத்தியாயம் முற்றிற்று.

    பத்தாவது அத்தியாயம்
    சும்ப வதம்

    (ஓம்)ரிஷி கூறியது: 1,2 பிராணனுக்கு நிகரான சகோதரன் நிசும்பன் கொல்லப்பட்டதையும் சைனியம் அழிக்கப்பட்டதையும் கண்டு சும்பன் கோபங்கொண்டு (துர்க்கா தேவியைப் பார்த்துப் பின் வரும்)வார்த்தையைச் சொன்னான்.

    3.  பலத்தினால் கொழுப்புப்பிடித்து மதிகெட்ட துர்க்கையே ! நீ கர்வத்தை (இங்கு என்னிடம்)கொண்டு வராதே . நீ மிகவும் கர்வம் கொண்டுள்ளாய் எனினும் பிறருடைய பலத்தைக் கொண்டே யுத்தம் செய்கின்றாய்.
    ,
    5.இங்கு உலகில் உள்ளவள் நான் ஒருத்தியே. என்னைத்தவிர இரண்டாவதாக என்ன உளது? புத்தி கெட்டவனே ! இவர்களெல்லாம் எனது அம்சாவதாரமானவர்கள் (என்னைத்தவிர வேறல்லர்).என்னிடமே புகுவதைக் காண்பாய்.

    6. பின்னர் பிரம்மாணீ முதலான அந்த தேவிகளெல்லாம் அந்த (கௌசிகீ)தேவியின் உடலில் புகுந்தனர். அம்பிகை ஒருத்தி மட்டுந்தான் அப்போது இருந்தாள்.

    7,8. என்னுடைய ஐசுவரிய சக்தியால் எந்தப் பல வடிவங்களைத் தோற்றுவித்தேனோ அவை என்னால் மீண்டும் கவரப்பட்டன ; ஒருத்தியாகவே நிற்கிறேன் ; யுத்தத்தில் ஸ்திரங்கொள்வாய்.

    ரிஷி கூறியது: 9,10. பின்னர் எல்லா தேவர்களும் அசுரர்களும் பார்த்துக் கொண்டிருக்கச் சும்பனுக்கும் தேவிக்கும் இருவருக்குமிடையில் யுத்தம் தொடங்கிற்று.

    11. பாண வர்ஷத்துடன் கூரிய சஸ்திரங்களுடனும், அவ்வாறே கொடிய அஸ்திரங்களுடனும் உலகனைத்தையும் நடுங்கச் செய்யும் போர் அவர்களிடையே மீண்டும் மூண்டது.

    12. அம்பிகை நூற்றுக் கணக்கில் விட்ட திவ்யாஸ்திரங்கள் எவையோ அவற்றை அசுர ராஜன் எதிர்த்து வெட்டும் அஸ்திரங்களால் வெட்டினான்.

    13. மேலும் அவன் விடுத்த திவ்யாஸ்திரங்களைப் பரமேசுவரி உக்கிரமான ஹீங்காரம்.உச்சாரணம் முதலியவற்றால் விளையாட்டாக அழித்தாள்.

    14. பின்னர் அவ்வசுரன் நூற்றுக்கணக்காண பாணங்களால் தேவியை மறைத்தான்.அந்த தேவியும் கோபித்து அவனுடைய வில்லை அம்புகளால் ஒடித்தாள்.

    15. வில்லொடிக்கப்பட்டதும் அசுரராஜன் சக்தி ஆயுதத்தை எடுத்துக்கொண்டான்.அதையும் தேவி தன் கையிலிருந்த சக்கராயுதத்தால் வெட்டினாள்.

    16. பின்பு அசுர ராஜாதிராஜன் வாளையும் பிரகாசம் பொருந்திய சத சந்திரம் எனும் கேடயத்தையும் எடுத்துக்கொண்டு தேவியை அப்போது எதிர்த்துப் பாய்ந்தான்.

    17. அவன் பாயும்போதே விரைவில் சண்டிகை அவன் வாளையும் சூரியன் போல் ஒளி பொருந்திய கேடயத்தையும் தனது வில்லினின்று விடுத்த பாணங்களால் சேதித்தாள்.

    18. அப்போது குதிரையுங் கொல்லப்பட்டு ஸாரதியுமின்றி வில்லும் ஒடிக்கப்பட்டு அவ்வசுரன் அம்பிகையைக் கொல்ல முயல்பவனாய் முத்கர ஆயுதத்தை எடுத்துக்கொண்டான்.

    19. கூரிய பாணங்களால் (தேவி) எதிர்த்து வரும் அவனுடைய முத்கரத்தைப் பிளந்தாள்.அப்படியும் அவன் முஷ்டியை உயர்த்திக்கொண்டு வேகமாக அவளை நோக்கிப் பாய்ந்தான்.

    20. அசுரசிரேஷ்டன் தேவியின் இருதயத்தில் முஷ்டியால் குத்தினான் .தேவியும் அவன் மார்பில் உள்ளங் கையால் அறைந்தாள்.

    21. கைத்தலத்தால் அறையுண்ட அவ்வசுர ராஜன் பூதலத்தில் வீழ்ந்தான் ;விரைவில் மீண்டும் எழுந்தான்.

    22. தேவியை எடுத்துக்கொண்டு ஆகாயத்தில் கிளம்பி நின்றான். அங்கும் ஆதாரமின்றியே அந்தச் சண்டிகா தேவி அவனுடன் போர் புரிந்தாள்.

    23. சண்டிகையும் அசுரனும் ஆகாய வெளியில் அப்போது ஒருவருடனொருவர் புது முறையில் ஸித்தர்களும் முனிவர்களும் அதிசயிக்கும்படி நெருங்கி யுத்தம் செய்தனர்.

    24. அம்பிகை நெடுநேரம் அவனுடன் நெருங்கி அவ்வாறு யுத்தம் செய்த பின் அவனைத் தூக்கிச் சுழற்றிப் பூதலத்தில் எறிந்தாள்.

    25. எறியப்பட்ட அந்த துஷ்டாத்மா பூமியையடைந்து முஷ்டியை உயர்த்திக் கொண்டு சண்டிகைøயைக் கொல்ல விரும்பி வேகமாகப் பாய்ந்தான்.

    26. தைத்திய மக்களின் அதிபனாகிய அவன் அங்ஙனம் வரும்போதே தேவியானவள் அவன் மார்பில் சூலத்தால் குத்திப் பிளந்து பூமியில் வீழ்த்தினாள்.

    27.தேவியின் சூலத்தால்  நுனியால் பிளவுண்ட அவன் கடல்களுடனும் துவீபங்களுடனும் மலைகளுடனும் கூடிய பூமி முழுவதையும் நடுங்க வைத்துக்கொண்டு பிராணனை விட்டுத் தரையில் வீழ்ந்தான்.

    28. அந்த துராத்மா கொல்லப்பட்டதும் உலகனைத்தும் ஆனந்தத்தில் மெய்மறந்தது. ஆகாயமும் நிர்மலமாய் விளங்கிற்று.

    29.வால் நக்ஷத்திரங்களுடன் கூடிய துர்நிமித்தங்கள் எவை முன் காணப்பட்டனவோ அவை சாந்தமடைந்தன.அவன் அங்கு வீழ்ச்சியுற்றதும் நதிகள் தம் வழியில் அடங்கிச் சென்றன.

    30. அவன் கொல்லப்பட்ட பின்னர் எல்லா தேவகணங்களும் ஆனந்தம் பொங்கும் மனத்தினராயினர். கந்தவர்கள் இனிமையாய்ப் பாடினர்.

    31,32. சிலர் வாத்தியங்களை முழங்கினர்.அப்ஸர கணங்கள் நர்த்தணம் செய்தனர். காற்றுச் சுபமாய் வீசிற்று. சூரியன் அழகிய பிரபையுடன் விளங்கினான். அக்கினிகள் சாந்தமாக ஜ்வலித்தன. திக்குகளில் எழுந்த ஒலிகளும் சாந்தமடைந்தன.

    ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமாஹாத்மியத்தில் பத்தாவது அத்தியாயம் முற்றிற்று.

    பதினோராவது அத்யாயம்

    தேவீ ஸ்துதி

    ரிஷி கூறியது: 1,2. அப்பெரிய அசுர ராஜன் தேவியால் கொல்லப்பட்டதும் அக்கினி தேவனை முன்னிட்டுக்கொண்டு இந்திரனுடன் எல்லா தேவர்களும் மலர்ந்த முகத்தாமரைகளால் திசைகளைப் பிரகாசிப்பித்துக்கொண்டு அங்கு கூடித் தங்கள் ஆசையின் பூர்த்தி எய்தியவர்களாய்க் காத்தியாயனியைத் துதித்தனர்.

    3. தேவி ! சரண் புகுந்தவர்களின் துன்பத்தைத் துடைப்பவளே ! அருள்வாய் அருள்வாய் .உலகனைத்திற்கும் அன்னையே ! அருள்வாய். <உலகின் ஈசுவரி ! உலகைக் காப்பாய் தேவி ! நீயே சராசரமனைத்தையுமாள்பவள்.

    4. பிருதிவி வடிவில் இருப்பதால், உலகிற்கு நீ ஒருத்தியே ஆதாரமாகின்றாய். கடத்தற்கரிய வீரியம் வாய்ந்தவளே ! அப்பு வடிவிலிருக்கும் உன்னாலேயே இது முழுதும் திருப்தி செய்விக்கப்படுகின்றது.

    5. அளவற்ற வீரியம் படைத்த விஷ்ணுவின் சக்தி நீயே. உலகிற்கு வித்தாகிய மகாமாயையும் ஆகின்றாய்,தேவி ! (உன்னால்) இது எல்லாம் மயக்கத்திலாழ்த்தப் பட்டுள்ளது. உலகில் நீ அருள் புரிந்தால் அது முக்திக்குக் காரணம்.

    6. எல்லா வித்தைகளும் உனது அம்சங்களே. கலைகளுடன் கூடிய எல்லா ஸ்திரீகளும் உலகில் அவ்வாறே (உனது öவ்வேறு வடிவங்களே யாவர்). ஒரே தாயாகிய உன்னாலேயே இவ்வுலகு நிறைந்துள்ளது. துதிக்குரியதின் பரமும் அபரமுமான வாக்கே நீயாயிருக்க உனக்குத் துதி எங்ஙனம்?

    7. எல்லாம் நீயேயாகவும்,போதகத்தையும் மோக்ஷத்தையும் அளிக்கும் பரதேவதையாகவும் நீ போற்றப்படும்போது எவ்வளவு சிறந்த சொற்களேயாயினும் எங்ஙனம் அவை உன்னைத் துதிக்கப் பயன்படும்?

    8. எல்லா ஜீவர்களுடைய இருதயத்திலும் புத்தி வடிவில் உறைபவளும், சுவர்க்கத்தையும் மோக்ஷத்தையும் அளிப்பவளும் ஆகிய நாராயணீ தேவியே, <உனக்கு நமஸ்காரம்.

    9. (காலத்தின் அளவாகிய) கலைவடிவிலும் காஷ்டை முதலிய வடிவுளிலும் இருந்துகொண்டு மாறுதல்களை உண்டாக்கி உலகின் ஒடுக்கத்திற்குக் காரண சக்தியாய் விளங்கும் நாராயணியே, உனக்கு நமஸ்காரம்.

    10. எல்லா மங்களங்களிலும் மங்களப் பொருளாய் விளங்குபவளே ! எல்லா நன்மைகளையும் அளிப்பவளே ! எல்லா ஆசைகளையும் பூர்த்தி செய்விப்பவளே ! சரணடைதற்குரியவளே ! மூன்று கண்களை யுடையவளே ! நாராயணீ தேவியே, உனக்கு நமஸ்காரம்.

    11. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் எனும் முத்தொழிலுக்கும் காரண சக்திகளாய் விளங்குபவளே ! என்றும் உள்ளவளே ! எல்லா குணங்களும் இருப்பிடமாக விளங்குபவளே ! குணங்களையே வடிவாய்க் கொண்டவளே ! நாராயணீ  உனக்கு நமஸ்காரம்.

    12. தன்னைச் சரணடைந்த தீனர்களையும் துன்புற்றோரையும் காப்பாற்றுவதையே தொழிலாய்க் கொண்டவளே ! எல்லோருடைய துன்பத்தையும் துடைப்பவளே ! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்.

    13. ஹம்ஸம் பூட்டிய விமானத்திலுறைபவளே ! பிரம்மாணீ வடிவெடுத்தவளே ! கூர்ச்சத்தால் தீர்த்தத்தைப் புரோக்ஷிப்பவளே ! நாராயணீ தேவியே! உனக்கு நமஸ்காரம்.

    14. மாஹேசுவரீ உருவத்தில் முச்சூலத்தையும்,சந்திரனையும்,பாம்பையும் தரிப்பவளே ! விருஷபத்தை வாகனமாய்க் கொண்டவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    15. மயிலுஞ் சேவலுஞ் சூழப் பெரிய வேலாயுதத்தைத் தரித்துக் கௌமாரீ வடிவு கொண்டவளே ! பாவமற்றவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    16. சங்கு, சக்கரம், கதை ,வில் ஆகிய சிறந்த ஆயுதங்களை ஏந்தி வைஷ்ணவீ வடிவுகொண்ட நாராயணீ ! அருள்வாய். உனக்கு நமஸ்காரம்.

    17. பயங்கரமான பெரிய சக்கரந்தாங்கித் தெற்றிப்பல்லில் பூமியைத் தூக்கிக்கொண்டு வராஹ ரூபந்தரித்த மங்கள வடிவினளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    18.முவ்வுலகையும் ரக்ஷிக்கும் நல்லெண்ணத்துடன் உக்கிரமான நரசிம்ம வடிவுடன் அசுரர்களைக் கொல்ல முற்பட்டவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    19. கிரீடந் தரித்துப் பெரிய வஜ்ராயுதங் தாங்கி ஆயிரங்கண்களுடன் ஜ்வலிக்கும் இந்திர சக்தியே ! விருத்திராசுரன் பிராணனைப் போக்கியவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    20. கோர ரூபமும் பயங்கரமான சப்தமும் <உடையவளே ! மிகுந்த பலம் பொருந்திய சிவதூதீவடிவில் அசுரர்களை அழித்தவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    21. தெற்றிப் பல் கொண்ட வாயும், தலைமாலை ஆபரணமும் உடைய சாமுண்டா தேவியே ! முண்டாசுரனை வதைத்தவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    22. லக்ஷ்மியாகவும், லஜ்ஜையாகவும், மஹாவித்தையாகவும், சிரத்தையாகவும், புஷ்டியளிக்கும் ஸ்வதாதேவியாகவும், நிலைபெற்றவளாகவும், மஹாராத்திரியாகவும், மஹா மாயையாகவும் உள்ளவளே ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    23. சிறந்த மேதா தேவியாகவும், ஸரஸ்வதியாகவும், ஐசுவரியமாகவும்,விஷ்ணு சக்தியாகவும், தாமஸ வடிவினளாகவும், இயற்கை வடிவினளாகவும் விளங்கும் ஈசுவரியே, நீ அருள்புரிவாய் ! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

    24. அனைத்தின் வடிவமாகவும், அனைத்தையும் ஆள்பவளாகவும்,சக்தியனைத்தும் பொருந்தியவளாகவும் விளங்கும் தேவியே, பயங்கரமான வற்றினின்று எங்களைக் காப்பாய் துர்க்கா தேவியே ! உனக்கு நமஸ்காரம்.

    25. இந்த அழகு மிகுந்ததும் மூன்று கண்களால் அலங்கரிக்கப் பெற்றதுமான உனது முகம் எங்களை எல்லா பயங்களினின்றும் காப்பாற்றவேண்டும். காத்யாயனீ ! உனக்கு நமஸ்காரம்.

    26. பயங்கரமான ஜ்வாலையுடனும் மிகுந்த கூர்மையுடனும் அசுரர்களை மிச்சமின்றி அழிக்கும் (உனது) திரிசூலம் எங்களைப் பயத்தினின்று காக்க வேண்டும் பத்ரகாளியே ! உனக்கு நமஸ்காரம்.

    27. தேவி ! எது தன் நாதத்தால் உலகை நிரப்பி தைத்தியர்களின் வீரியத்தை அழிக்கின்றதோ அந்த மணியானது சகடத்திடையில் விழுவதினின்று புத்திரர்களை (தாய்)காப்பது போல் பாவங்களினின்று எங்களைக் காக்கட்டும்.

    28. அசுரர்களின் ரத்தமும் கொழுப்புங் கலந்த சேற்றல் பூசப்பட்டதும் கிரணம் விடும் ஒளி பொருந்தியதுமான உனது வாள் நன்மை பயப்பதாகட்டும்.சண்டிகையே ! உன்னை நாங்கள் வணங்குகிறோம்.

    29. நீ ஸந்தோஷ மடைந்தால் எல்லா நோய்களையும் அறவே போக்குகிறாய். கோபத்தாலோ வேண்டப்படும் காமங்களை எல்லாம் (அறவே அழிக்கின்றாய்). உன்னை அண்டிய மனிதர்க்கு விபத்துக் கிடையாது. உன்னை அண்டியவர் பிறர் அண்டுதற்குரியவராகின்றனரன்றோ?

    30. தேவி ! தருமத்தைப் பகைக்கும் கொடிய அசுரர்களின் வதமாகிய இது உன் மூர்த்தியையே பலவாக்கிப் பல வடிவங்கொண்டு எங்ஙனம் உன்னால் செய்யப்பட்டதோ அங்ஙனம்,அம்பிகையே,வேறு யார் செய்ய இயலும் ?

    31. வித்தைகளிலும் சாஸ்திரங்களிலும் விவேகத்திற்கு முதல் விளக்காகிய வேதத்தின் வாக்கியங்களிலும் (கூறப்படுவது) உன்னை யல்லாது வேறு யாரை ? (உன்னையல்லாது வேறு யார்தான் இவ்வுலகை மமதையால் கவ்வப்பட்ட கொடிய (அஞ்ஞான) இருளில் வெகுவாய்ச் சுழலவைப்பது ?

    32. ராக்ஷஸர்கள் உள்ள விடத்தும்,கொடிய விஷப்பாம்புகள் உள்ள விடத்தும்,சத்துருக்கள் உள்ள விடத்தும், திருடர் கூட்டம் உள்ள விடத்தும் , காட்டுத் தீ பரவிய விடத்தும், அவ்வாறே நடுக்கடலிலும் அங்கங்கு இருந்துகொண்டு உலகையெல்லாம் நீயே காக்கிறாய்.

    33. உலக நாயகியாகிய நீ உலகைப் பாலிக்கின்றாய். உலக வடிவினளாகிய நீ உலகைத் தாங்குகின்றாய். உலக நாயகர்களால் நீ பூஜிக்கப் படுபவளாகின்றாய். உன்னை உள்ளன்புடன் வணங்குவோர் எவரோ அவரே உலகிற்குப் புகலிடமாய் விளங்குவோர்.

    34.தேவி ! அருள் புரிவாய். இப்போது விரைவில் அசுரர்களைக் கொன்று எங்களைக் காத்தாற்போல் எப்போதும் சத்துரு பயத்தினின்று காக்க வேண்டும். உலகனைத்திலுமுள்ள பாவங்களையும் தீச்செயலின் பயனாய்த் தோன்றும் பெருங்கொடுமைகளையும் விரைவில் நாசம் செய்ய வேண்டும்.

    35. தேவி ! முவ்வுலக வாசிகளாலும் போற்றப் பெறுபவளே ! உலகனைத்தின் இன்னல்களைப் போக்குபவளே ! நீ உலகங்களுக்குச் சிறந்த நன்மைகளை அளிப்பவளாய் விளங்கி, உன்னை வணங்குவோர்க்கு அருள் புரிவாய்.

    தேவி கூறியது: 36,37. தேவகணங்களே ! உலகிற்கு உபகாரமாக எந்தவரத்தை நீங்கள் மனதால் விரும்பினாலும் அதைக் கேட்கலாம். வரமளிப்பவளாகிய நான் அதைக் கொடுக்கிறேன்.

    தேவர்கள் கூறியது:  38,39. அகில நாயகியே ! இவ்வாறே முவ்வுலகின் துன்பங்கள் முழுவதும் நாசம் செய்யப்படவேண்டும். உன்னால் எங்கள் சத்துருக்கள் அழிக்கப்படவேண்டும்.

    தேவி கூறியது: 40,41. வைவஸ்த மன்வந்தரத்தில் இருபத்தெட்டாவது சதுர்யுகம் நிகழும்போது சும்பன் நிசும்பன் என்ற வேறு இரண்டு கொடிய அசுரர்கள் தோன்றப் போகிறார்கள்.

    42. யசோதையின் கருவில் தோன்றி நந்தகோபர் வீட்டில் பிறந்து விந்தியாசலத்தில் வசிக்கப் போகும் நான் அப்போது நாசம் செய்யப் போகிறேன்.

    43.மீண்டும் பூதலத்தில் மிகவும் பயங்கரமான வடிவில் அவதரித்து வைப்ரசித்தர்கள் எனும் அசுரர்களை நாசம் செய்யப் போகிறேன்.

    44. மிகவும் கொடிய அசுரர்களாகிய அந்த வைப்ரசித்தர்களை நான் பக்ஷிக்கும்போது எனது பற்கள் மாதுளம் பூப்போல் சிவந்து போகும்.

    45.அதனால் ஸ்வர்க்கத்தில் தேவதைகளும், மனித உலகில் மானிடர்களும் என்னைத் துதிக்கும்போது எப்போதும்  ரக்த தந்திகா  என்று குறிப்பிடப் போகிறார்கள்.

    46. மறுபடியும் நூறு வருஷங்கள் மழை பெய்யாமலிருக்க, அப்போது முனிவர்களால் துதிக்கப்பெற்று நீரின்றி வரண்ட பூமியில் கர்ப்ப வாசம் செய்யாமல் தோன்றுவேன்.

    47. அப்போது முனிவர்களை நான் நூறு கண் கொண்டு பார்க்கப் போவதால் என்னை மனிதர் சதாக்ஷி எனப் போற்றுவர்.

    48. தேவர்களே ! பின்னர் மழை பெய்யும் வரை உயிரைக் காப்பாற்றும் ஒஷதிகளை என் உடலிலிருந்தே தோற்றுவித்து அவற்றால் உலகனைத்தையும் போஷிக்கப் போகிறேன்.

    49. அப்போது பூமியில் நான் சாகம்பரீ எனப் பிரசித்தியடையப் போகிறேன்.அதே காலத்தில் துர்க்கமன் எனும் கொடிய அசுரனையும் வதைக்கப் போகிறேன்.

    50,53. அதனால் எனக்கு துர்க்கா தேவி என்ற சிறப்புப் பெயர் ஏற்படப் போகிறது. மீண்டும் இமயமலையில் முனிவர்களைக் காப்பதற்காக எப்போது பயங்கரமான ரூபத்தை யெடுத்துக்கொண்டு ராக்ஷஸர்களே அழிப்பேனோ அப்போது முனிவர்களெல்லாம் தலை வணங்கி என்னைத் துதிக்கப் போகிறார்கள்.அச்சமயம் பீமா தேவி என்ற சிறப்புப் பெயர் எனக்கு ஏற்படப் போகிறது. அருணன் என்ற அரசன் எப்போதும் முவ்வுலகிற்கும் பெரிய கொடுமை விளைவிக்கப் போகின்றானோ அப்போது நான் ஆறு பாதங்களுடன் எண்ணிறந்த வண்டுக் கூட்டமாய்த் தோன்றி முவ்வுலகிற்கும் நன்மையை நாடி அக்கொடிய அசுரனை வதைக்கப் போகிறேன்.

    54,55. அப்போது உலக மக்களெல்லாம் எங்கும் என்னை ப்ராமரீ எனத் துதிக்கப் போகின்றனர். இவ்வாறு எப்பெப்போது தானவர்களின் எழுச்சியால் துன்பம் ஏற்படுமோ அப்பப்போது நான் அவதரித்துச் சத்துருக்களை நாசம் செய்வேன்.

    ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமாஹாத்மியத்தில் பதினோராவது அத்தியாயம் முற்றிற்று.

    பன்னிராண்டாவது அத்தியாயம்

    பல ஸ்துதி

    தேவி கூறியது: 1,2. இந்த ஸ்துதிகளால் என்னை நாள் தோறும் மனதையடக்கி எவன் துதிக்கின்றானோ அவனுடைய துன்பங்களையெல்லாம் நான் நிச்சயம் போக்குவிப்பேன்.

    3-5. மதுகைடப வதத்தையும், மஹிஷாசுரவதத்தையும் சும்ப நிசும்பர்களின் வதத்தையும் (பற்றிய வரலாற்றை) எவர்கள் கீர்த்தனம் செய்கின்றார்களோ, அல்லது எனது சிறந்த மாஹாத்மியத்தை ஒருமைப்பட்ட மனத்துடன் அஷ்டமியிலும், சதுர்த்தசியிலும் நவமியிலும் பக்தியுடன் கேட்கின்றார்களோ அவர்களுக்குச் சிறிதும் கெடுதி வராது ; கெடுதியால் விளையும் ஆபத்தும்
    வராது ; ஏழ்மை வராது ; பிரியத்தின் பிரிவும் வராது .

    6.சத்துருக்களிடமிருந்தோ, திருடர்களிடமிருந்தோ, அரசர்களிடமிருந்தோ,ஆயுதங்களாலோ, நெருப்பாலோ, வெள்ளத்தாலோ, ஒருபோதும் (இதைப்படிக்கும்) அவனுக்குப் பயம் ஏற்படாது.

    7.ஆகையால் இந்த என் மாஹாத்மியம் ஒருமைப்பட்ட மனத்துடன் படிக்கப்படவேண்டும்.எப்போதும் பக்தியுடன் கேட்கப்படவும் வேண்டும். அதுவே நன்மைக்குச் சிறந்த வழி.

    8.பெருவாரி மரணத்தை விளைவிக்கும் விபத்துக்களையும் அவ்வாறே மூன்று வகையான துன்பங்களையும் எனது மாஹாத்மியம் போக்குவதாயிருக்கட்டும்.

    9.எனது ஆலயத்தில் எங்கு இது நன்றாக நித்யம் படிக்கப்படுகிறதோ அங்கு விட்டு நான் விலகுவதில்லை. அங்கு எனது ஸாந்நித்யம் நிலைபெறுகின்றது.

    10. பலிப்பிரதானத்திலும்,பூஜையிலும் அக்னி காரியத்திலும், மஹோத்ஸவத்திலும், இந்த என் சரிதம் முழுவதும் வாசிக்கவும் கேட்கவும் படவேண்டும்.

    11. அவ்வாறு செய்யப்பட்ட பலிதானத்தையும் பூஜையையும் அவ்வாறு செய்யப்பட்ட அக்கினி ஹோமத்தையும் ஞானத்துடன் செய்யப்பட்டாலும் ஞானமின்றிச் செய்யப்பட்டாலும் நான் அன்புடன் ஏற்றுக் கொள்கிறேன்.

    12,13. சரத் ருதுவில் வருஷந்தோறும் செய்யப்படும் மஹாபூஜை எதுவோ அதில் இந்த எனது மாஹாத்மியத்தைப் பக்தியுடன் கேட்கும் மனிதன் என்னருளால் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டுத் தனமும் தானியமும் மக்களும் உடையவனாய் ஆவான். இதில் ஐயமில்லை.

    14. என்னுடைய இந்த மாஹாத்மியத்தையும் அவ்வாறே மங்களமான உற்பத்தி வரலாறுகளையும்,யுத்தங்களில் பராக்கிரமத்தையும் கேட்ட மனிதன் பயமற்றவனாவான்.

    15. எனது மாஹாத்மியத்தைக் கேட்கும் மனிதர்க்குச் சத்துருக்கள் நசிக்கின்றனர் ; மங்களம் உண்டாகிறது ; குலம் சந்தோஷமடைகிறது.

    16. சாந்திக் கிரியைகளிலும், கெட்ட கனவு கண்டபோதும், உக்கிரமான கிரக பீடை ஏற்பட்டபோதும் எல்லா விடங்களிலும் எனது மாஹாத்மியத்தைக் கேட்கட்டும்.

    17. உத்பாதங்களும் கொடிய கிரக பீடைகளும் கெட்ட கனவும் ஒழிந்துபோம். நல்ல கனவு தோன்றும்.

    18. பாலக்கிரகங்களினால் பீடிக்கப்பட்ட பாலர்களுக்கு இது சாந்தியளிப்பது.மனிதர்களின் கூட்டுறவில் பிளவு ஏற்பட்டால் மீண்டும் நட்பை உண்டாக்குவது.

    19. கெட்ட நடத்தையுடையவர்கள் எல்லோருடைய பலத்தையும் அழிப்பதில் சிறந்தது ; ர÷க்ஷõ கணங்களும் பூதங்களும் பிசாசங்களும் இதைப் படிப்பதினாலேயே நாசமடைகின்றன.

    20-22. இந்த எனது மாஹாத்மியம் முழுதும் எனது ஸாந்நித்தியத்தை யளிக்கவல்லது. சிறந்த பலி, புஷ்பம், அர்க்கியம், தூபம், கந்தம், தீபம், பிராம்மண போஜனம்,ஹோமம்,புரோக்ஷணம் இன்னும் பல விதமான போக்கிய வஸ்துக்களை யளித்தல் முதலியனவற்றால் இரவும் பகலும் ஒரு வருஷம் விரதமனுஷ்டித்தால் எனக்கு எந்தப் பிரீதி ஏற்படுமோ அது இந்த நற்சரிதத்தை ஒரு முறை கேட்டால் உண்டாகும்.கேட்பது பாபங்களைப் போக்கும்,ஆரோக்கியத்தை யளிக்கும்.

    23,24. எனது பிறப்பைப் பற்றிக் கீர்த்தனம் செய்தல் பூதங்களினின்று ரøக்ஷ யளிக்கும். துஷ்ட தைத்தியர்களை நாசம் செய்த எனது யுத்த சரித்திரம் எதுவோ அது கேட்கப்பட்டால் மனிதனுக்குச் சத்துரு பயம் உண்டாகாது. நீங்கள் செய்த ஸ்தோத்திரங்கள் எவையோ, பிரம்மரிஷிகள் செய்தவை எவையோ, பிரம்மா செய்தவை எவையோ அவை மங்களமான மதியைத் தருவனவாம்.

    25-30. அரணியத்தின் நடுவிலோ, காட்டுத்தீயின் இடையிலோ, தனிமையான இடத்தில் திருடர்களால் சூழப்பட்ட போதோ,சத்துருக்களிடம் பிடிபட்டபோதோ,சிங்கத்தாலும் புலியாலும் காட்டுயானையாலும் காட்டில் துரத்தப்பட்ட போதோ,கோபங்கொண்ட அரசனால் மரண தண்டனையோ, சிறைவாசமோ விதிக்கப்பட்டபோதோ ,பெருங்கடலில் காற்றினாலலைக்கப்பட்ட படகிலிருக்கும் போதோ,மிகவும் கொடிய யுத்தத்தில் ஆயுதங்கள் மேல் விழும்போதோ,எல்லா விதமான கொடிய சங்கடங்களிலும் ,வேதனைகளால் பீடிக்கப்பட்ட நிலையிலும்,எனது இச்சரிதத்தை ஸ்மரித்தால் மனிதன் சங்கடத்தினின்று விடுபடுவான். எனது மகிமையால் சிங்கம் முதலியவைகளும் திருடர்களும் சத்துருக்களும் எனது சரிதத்தை நினைத்த மாத்திரத்தில் தூர ஓடிவிடுவர்.

    ரிஷி கூறியது: 31,32. இவ்வாறு கூறிவிட்டு, தீவிரமான பராக்கிரமம் பொருந்திய பகவதீ சண்டிகை, தேவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அங்கேயே மறைந்தாள்.

    33. அந்த தேவர்களும் எதிரிகள் நாசம் செய்யப்பட்டுக் கவலை நீங்கியவர்களாய் ய<ஜ்ஞபாகங்களைப் புசிப்பவர்களாய் முன்போல் தங்கள் அதிகாரங்களைச் செலுத்தலாயினர்.

    34,35. உலகை யழிப்பவர்களும், மிகக் கொடியவர்களும், ஒப்பற்ற பராக்கிரமம் பொருந்தியவர்களும், மகா வீரியம் படைத்தவர்களும்,தேவ சத்துருக்களுமான சும்பனும் நிசும்பனும் யுத்தத்தில் தேவியால் கொல்லப்பட்டபின் எஞ்சியிருந்த தைத்தியர்கள் பாதாளம் சென்றனர்.

    36. அரசே ! இங்ஙனம் அந்த பகவதீ தேவியானவள் பிறப்பிறப்பற்றவளாயினும் மீண்டும் மீண்டும் தோன்றி உலகின் பரிபாலனத்தைச் செய்கின்றாள்.

    37. அவளாலேயே இவ்வுலகம் மயக்கப்படுகிறது. அவளே உலகைச் சிருஷ்டிக்கின்றாள்.அவளைப் பிரார்த்தித்தால் விசேஷமான ஞானத்தையும், பிரீதி செய்விக்கப்பட்டால் குறைவற்ற ஐசுவரியத்தையும் அளிப்பாள்.

    38.அரசே ! பிரளய காலத்தில் மகா ஸம்ஹாரிணியாய்த் தோன்றும் அந்த மஹா காளியால் இந்த பிரம்மாண்டம் முழுதும் வியாபிக்கப்பட்டுள்ளது.

    39. பிரளயகாலத்தில் மகாமாரியாய் விளங்குபவள் அவளே.பிறப்பற்ற அவளே சிருஷ்டியாகவும் ஆகின்றாள். அனாதியான (ஸ்திதி)காலத்தில் பிராணிகளை வைத்துக் காப்பாற்றுகின்றாள்.

    40. ஆகுங்காலத்தில் மக்கள் வீட்டில் செல்வத்தைச் செழிக்கச்செய்யும் லக்ஷ்மீ தேவி அவளே. போகுங்காலத்தில் செல்வத்தை யழிப்பதற்கு அலக்ஷ்மியாகவும் அவளே தோன்றுவாள்.

    41. புஷ்பம் தூபம் கந்தம் முதலியவற்றால் பூஜித்துத் துதிக்கப்பட்டால் செல்வத்தையும் புத்திரர்களையும் தர்மத்தில் மதியையும் நல்ல கதியையும் அளிப்பாள்.  ஓம்.

    ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமாஹாத்மியத்தில் பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.

    பதின்மூன்றாவது அத்தியாயம்

    வரப் பிரதானம்

    ரிஷி கூறியது: 1,2. அரசே ! இந்த உத்தமமான தேவீமாஹாத்மியம் உனக்குக் கூறப்பட்டது. எந்த தேவியால் இவ்வுலகம் பாலிக்கப்படுகிறதோ அவளுடைய மகிமை இது எல்லாம்.

    3,4. விஷ்ணுவின் மாயா சக்தியாகிய இந்த பகவதீதேவியாலேயே ஞானம் அளிக்கப்படுகிறது. அவளாலேயே நீயும் இந்த வைசியனும் மயக்கப்பட்டுள்ளீர். மற்ற விவேகிகளும் அவ்வாறே மயக்கப்படுகின்றனர் ,மயக்கப்பட்டனர். பிறரும் மயக்கப்படுவர்,மகாராஜனே ! அந்தப் பரமேசுவரியையே சரணடைவாய்.

    5.ஆராதிக்கப்பட்டால் அவளே மனிதருக்கு போகத்தையும் ஸ்வர்க்கத்தையும் மோக்ஷத்தையும் தந்தருள்வாள்.

    மார்க்கண்டேயர் கூறியது: 6-9. முனிசிரேஷ்டரே ! ராஜ்யம் அபகரிக்கப்பட்டதாலும் மமகாரத்தின் மிகுதியாலும் மனம் வெறுத்துப் போயிருந்த ஸுரதன் என்ற அவ்வரசனும் அவ்வாறே அவ் வைசியனும் அவருடைய இவ்வார்த்தையைக் கேட்டு, விரதமும் மகிமையும் மிக்க அம்மகரிஷியை வணங்கி தேவியைத் தரிசிக்கும் பொருட்டு அப்போதே தவத்திற்குச் சென்று நதியின் மணல் திட்டில் அமர்ந்தனர். 

    10. வைசியனும் அவ்வரசனுமாகிய இருவரும் அந்நதிக் கரையில் மண்ணினால் தேவியின் பிரதிமையை அமைத்துக்கொண்டு தேவீஸூக்தத்தை ஜபிப்பவராய்த் தவம் செய்தனர்.

    11. (சில சமயம்) ஆகாரமில்லாமலும், (சில சமயம்) ஆகார நியமத்துடனும், மனதை யடக்கி அவளையே தியானிப்பவராய்ப் புஷ்பத்தாலும் தூபத்தாலும் அக்னியில் ஹோமத்தாலும் தர்ப்பணத்தாலும் அவளுக்குப் பூஜை செய்தனர்.

    12,13. தங்கள் உடலினின்று எடுத்த ரத்தந் தோய்ந்த பலிதானத்தையும் செய்தனர். இங்ஙனம் அடங்கிய சித்தத்துடன் மூன்று வருஷம் ஆராதித்த பின் அவர்களிடம் ஸந்தோஷமடைந்த ஜகத்தாத்ரியான சண்டிகாதேவி பிரத்யக்ஷமாகிப் பின் வருமாறு கூறினாள்.

    தேவி கூறியது: 14,15. அரசே ! உன்னால் எது பிரார்த்திக்கப்படுகின்றதோ, குலத்தை மகிழ்விக்கும் (வைசியனே ! ) உன்னாலும் எது பிராத்திக்கப்படுகின்றதோ,என்னிடமிருந்து அதை அடையலாம். ஸந்தோஷமடைந்த நான் அதை அளிக்கின்றேன்.

    மார்க்கண்டேயர் (தமது சிஷ்யர் பாகுரிக்கு)கூறியது: 16,17. அரசன் தற்போது தனது பலத்தால் சத்துரு பலத்தை யழித்துத் தன் ராஜ்யத்தை மீண்டும் பெறுதலையும் அடுத்த ஜன்மத்தில் சத்துருவால் அழிக்க முடியாத ராஜ்யத்தையும் வரமாகக் கேட்டுக்கொண்டான்.
    18.அந்த புத்திமானான வைசியனோ மனதில் வைராக்கியம் உதித்தவனாய் அஹங்கார மமகாரப் பற்றினின்று விடுவிக்கும் ஞானத்தை வரமாகக் கேட்டுக்கொண்டான்.

    தேவி கூறியது: 19-21. அரசே ! சில நாட்களில் சத்துருக்களை ஜயித்து உன் ராஜ்யத்தை மீண்டும் நீ அடைவாய். அது உன்னிடமிருந்து நழுவாமலிருக்கும்.

    22,23. இப்பிறவி நீங்கியபின் விவஸ்வத் தேவனிடம் மீண்டும் பிறந்து ஸாவர்ணிகன் எனப் பெயர் படைத்த மனுவாக நீ பூமியில் விளங்கப் போகிறாய்.

    24,25. வைசிய சிரேஷ்டனே ! உன்னால் எந்த வரம் என்னிடம் விரும்பிக் கேட்கப்பட்டதோ அதை அளிக்கின்றேன். ஞானம் உனக்குச் சித்தியளிப்பதாகும்.

    மார்க்கண்டேயர் கூறியது: 26-29. இவ்வாறு தேவியானவள் அவர்களுக்கு அவரவர் விரும்பிய வரத்தையளித்த பின் அவர்களால் பக்தியுடன் துதிக்கப்பெற்று அப்போதே மறைந்தாள். இங்ஙனம் தேவியிடமிருந்து வரத்தைப் பெற்ற காரணத்தால் க்ஷத்திரிய சிரேஷ்டனான ஸூரதன் ஸூர்ய பகவானிடம் பிறவியடைந்து ஸாவர்ணி மனுவாக விளங்கப் போகிறான்.  ஸாவர்ணி மனுவாக விளங்கப் போகிறான்.   ஓம்.

    ஓம் ஜய ஜய ஸ்ரீ மார்க்கண்டேய புராணத்தில் ஸாவர்ணிக மன்வந்தரத்திலுள்ள தேவீமாஹாத்மியத்தில் பதின்மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.

    உத்தர பாகம்

    1. நவாக்ஷரீ

    ஸ்ரீநவாக்ஷரீ மஹா மந்திரமாகிய இதற்கு மார்க்கண்டேயர் ரிஷி; ஜகதீச்சந்தம்; துர்க்கா-லக்ஷ்மீ- ஸரஸ்வதீ தேவதை.

    ஹ்ராம் என்ற பீஜத்தை நாபியிலும், ஹ்ரீம் என்ற சக்தியைக் கருக்குழியிலும் ஹ்ரூம் என்ற கீலகத்தைப் பாதங்களிலும் நியாஸம் செய்க.
    துர்க்கா- லக்ஷ்மீ- ஸரஸ்வதியின் திருவருள் சித்திக்கும் பொருட்டு ஜபத்தில் அதற்குப் பயன் என்று இருகைகளாலும் எல்லா அங்கங்களையும் தொடுக.

    தியானம் - தாயே மதுகைடபர்களை வதம் செய்தவளே ! மஹிஷாஸுரனுடைய பிராணனைப் போக்கியவளே ! விளையாட்டாக தூம்ரலோசனனை வதைத்தவளே ! சண்ட முண்டர்களை யழித்தவளே ! ரத்த பீஜாசுரனை நிர்மூலமாக்கியவளே ! சும்பனையும், நிசும்பனையும் ஒழித்தவளே ! நித்தியமானவளே ! துர்க்காம்பிகையே ! உன்னை நமஸ்கரிக்கின்றேன். விரைவில் எனது பாவத்தைப் போக்கியருள்வாய். பின்னர் பஞ்ச பூஜையும் மந்திர ஜபமும். திக்விமோசனம். மறுபடி பஞ்ச பூஜை, ஜப ஸமர்ப்பணம்.
     
    2. தேவீ ஸூக்தம்

    1. ஓம். நான் (ஜகத்காரணமாகிய பிரம்மஸ்வரூபிணியாதலால்) ருத்திரர்களிடத்தும் வசுக்களிடத்தும் (அவர்களுடைய ஆத்மாவாய்) நடமாடுகின்றேன். நான் அவ்வாறே ஆதித்தியர்களுடனும் விசுவே தேவர்களுடனும், நான் மித்திரன் வருணனாகிய இருவரையும் இந்திரன் அக்கினியாகியவர்களையும் தாங்குகின்றேன். அசுவனீ தேவர்கள் இருவரையும் (தாங்குகின்றேன்.)

    2. சத்துருக்களைக் கொல்லும் ஸோமனை நான் தாங்குகின்றேன். த்வஷ்டாவையும், பூஷாவையும் பகனையும் நான் (தாங்குகின்றேன்.) ஸோமரஸத்தை (யாகத்திற்காக) பிழிபவனும், ஹவிஸ்ஸீடன் கூடியவனும், (நல்ல ஹவிஸ்ஸை தேவர்கள்) அடையச் செய்பவனும் ஆகிய யஜமானுக்கு நான் (யாகத்தின் பயன் வடிவாகிய ) செல்வத்தைத் தாங்குகின்றேன்.

    3. நான் உலகை ஆள்பவள் ; செல்வத்தைக் கூட்டி வைப்பவள் ; பிரம்மத்தை ஸாக்ஷõத்கரித்தவள்; பூஜைக்குரியவர்களுள் முதன்மையானவள்; (விசுவரூபியாகி நான் இருப்பதால் ) பல வடிவில் எங்கும் நிறைந்து நிற்பவளும் நல வடிவில் எல்லா ஜீவராசிகளிலும் புகுந்துறைபவளுமான அப்படிப்பட்ட என்னையே தேவர்கள் பல விடங்களிலும் (செய்யும் செயல்களால்)பூஜை செய்கின்றனர் .

    4. எவன் அன்னத்தை உண்கின்றோனா அவன் என்னாலேயே (உண்கின்றான்) ; எவன் பார்க்கின்றானோ அவன் என்னாலேயே பார்க்கின்றான்). எவன் மூச்சு விடுகின்றானோ (அவன் என்னாலேயே மூச்சு விடுகின்றான்).இவ்வாறு நான் அனைத்துள்ளும் இருக்கிறேன் என்று கூறப்பட்டதை எவர்கள் கேட்டு உணர்கின்றார்களோ அவர்கள் (விடுதலையை) கருதாவிடினும் (பிறவித் தளையினின்று) விடுபடுகின்றனர். அங்ஙனம் என்னை உணராதவர்கள் ஸம்ஸாரத்தில் தாழ்மையடைகின்றனர். அன்பனே ! சிரத்தையுடன் கூடிய உனக்கு நான் சொல்வதைக் கேள்.

    5. (பிரம்மாத்மகமாகிய) இது நேரில் நானே என்று கூறுகின்றேன். தேவர்களாலும் மானிடர்களாலும் சேவிக்கப்பட்டவள் நானே. எவனை நான் விரும்புகின்றேனோ அவனை நான் எல்லோருக்கும் உயர்ந்தவனாகச் செய்கின்றேன்; அவனைப் பிரம்மாவாகவோ, அவனை ரிஷியாகவோ, அவனை அறிவிற் சிறந்தவனாகவோ செய்கின்றேன்.

    6. பிரம்மிஷ்டர்களைத் துவேஷித்து இம்சிக்கும் அசுரர்களைக் கொல்லுவதற்காக ருத்திரனுக்கு நான் வில்லை நாண் பூட்டுகிறேன். (என்னை நாடும்) மக்களின் பொருட்டு நான் போர் புரிகிறேன். வானிலும் மண்ணிலும் (அந்தர்யாமியாக) புகுந்துறைகின்றேன்.

    7. இந்த (ஸர்வாதிஷ்டான ரூப) பரமாத்மாவின் சிரம் போன்ற ஆகாயத்தை (ஜகத் பிதாவாக) நான் சிருஷ்டிக்கின்றேன். காரண (யோனி) வடிவான எனது சைதன்யம் ஜலத்தில் ஸமுத்திரத்தினுள்ளும் இருக்கின்றது. அதனால் நான் இந்த உலகனைத்தையும் ஊடுருவி நிற்கின்றேன். வானுலகையும் எனது சரீரத்தால் தொடுகின்றேன்.

    8. உலகங்களை யெல்லாம் சிருஷ்டிக்க ஆரம்பிக்கும் போது நானாக (பிறருடைய ஏவுதலின்றி) காற்றைப்போல் சலிக்கின்றேன். நான் வானுக்குமப்பால் இந்த பூமிக்குமப்பால் உள்ளவள். இங்ஙனம் (எல்லா உலகிற்கும் ஆத்மாவாய் விளங்கும் ) மகிமை உடையவளாய் நான் தோன்றியுள்ளேன்.

    இங்ஙனம் ரிக் வேதத்திலடங்கிய தேவீஸ ஏக்தம் முற்றிற்று.

    3. ப்ராதானிக ரஹஸ்யம்

    அரசன் (ஸுரதன்)கூறியது:  1. ஐயனே ! சண்டிகா தேவியின் அவதாரங்களின் வரலாறுகள் உங்களால் எனக்குச் சொல்லப்பட்டது. பிரம்ம ஸ்வரூபியே ! அவற்றின் மூலஸ்வரூபத்தையும் முக்கிய ஸ்வரூபத்தையும் தாங்கள் கூறியருளுதல் தகும்.

    2. பிராம்மணோத்தமரே ! உங்களை வணங்கி நிற்கும் எனக்கு தேவியின் எந்த ஸ்வரூபம் எந்த முறையில் என்னால் பூஜிக்கத் தகுந்தது என்று உள்ளபடி முழுதும் கூறுதல் வேண்டும்.

    ரிஷி கூறியது: 3. அரசே ! (நீர் கேட்ட) இது பரம ரகசியமானது.(எவருக்கும் எளிதில்) சொல்லக்கூடாது என்று (பெரியோர்)கூறுவர். ஆனால் நீர் எனது பக்தராதலால் உம்மிடம் சொல்லத் தகாதது என்னிடம் ஒன்றுமில்லை.

    4. முக்குண வடிவினளும் பரமேசுவரியுமான மஹாலக்ஷ்மி எல்லாவற்றிற்கும் முதற் காரணமாகியவள். காணப்படுவதும் காணப்படாததுமான ஸ்வரூபமுடைய அவள் அனைத்தையும் வியாபித்து நிற்கிறாள்.

    5. அரசே ! (அவள் நான்கு கைகளில்)மாதுளம்பழம், கதை, கேடயம், பானபாத்திரம் ஆகியவற்றைத் தரிப்பவளாயும், நாகப்பாம்பு, லிங்கம்,யோனி இவற்றைத் தலையில் தரிப்பவளாயும் விளங்குகின்றாள்.

    6. உருக்கிய பொன் நிறங்கொண்டவளும், உருக்கி வார்த்த பொன் ஆபரணம் பூண்டவளுமாகிய அவள் சூனியமான (உலகு) அனைத்தையும் தனது ஒளியால் நிரப்பினாள்.

    7. பரமேசுவரியான மஹாலக்ஷ்மி உலகனைத்தும் சூனியமாயிருக்கக் கண்டு தமோகுணத்தால் ஒரு சிறந்த வடிவத்தை எடுத்துக்கொண்டாள்.

    8. தெற்றிப்பல் கொண்ட சிறந்த முகத்துடனும் பரந்த கண்களுடனும், சிறுத்த இடையுடனும் மை வண்ணத்தில் செதுக்கினாற் போன்றதொரு பெண்ணுருக் கொண்டாள்.

    9. கத்தி, பானபாத்திரம், (வெட்டிய) தலை,கேடயம், ஆகியவை நான்கு கைகளை அலங்கரிக்க (மார்பில்)தலையற்ற சடலங்களை மாலையாக அணிந்துகொண்டு, தலையில் ஸர்ப்பசிரோமாலை தாங்கியவளாய் (விளங்கினாள்).

    10. தமோகுணத்துதித்த அந்தப் பெண்ணரசி மஹாலக்ஷ்மியை நோக்கி, தாயே ! உமக்கு நமஸ்காரம், நமஸ்காரம். எனக்குப் பேரும் தொழிலும் அளித்தருள்வீர்என்றாள்.

    11. மஹாலக்ஷ்மியானவள் அந்தத் தாமஸப பெண்ணரசியை நோக்கி, உனது நாமங்கள் எவையோ,தொழில்கள் எவையோ அவற்றை உனக்கு அளிக்கின்றேன் எனக் கூறினாள்.

    12. மஹாமாயை, மஹாகாளீ, மஹாமாரீ, க்ஷúதா(பசி), த்ருஷா (தாகம்), நித்ரா (தூக்கம்), த்ருஷ்ணா (ஆசை), ஏகவீரா (நிகரற்ற வீரியம் படைத்தவள்), தன்னை எவரும் மீற முடியாமல் தான் காலத்தையும் கடந்து நிற்கும் கால ராத்ரி ;

    13. உனது நாமங்களாகிய இவை உனது தொழில்களால் (உலகில்) பிரசித்தியடையப்போகின்றன. (ரூபங்களும் நாமங்களும் ஆகிய) இவற்றால் <உனது செயல்களை ஒருவன் அறிந்து கொண்டு அவற்றைப் பாராயணம் செய்தால் அவன் சுகத்தை யனுபவிப்பான்.

    14. அரசே ! மஹாலக்ஷ்மியானவள் அவளிடம் இங்ஙனம் கூறிவிட்டு மிகவும் சுத்தமான ஸத்துவ குணத்தால் சந்திரன் போல் ஒளி பொருந்திய வேறொரு வடிவு கொண்டாள்.

    15. சிறந்த பெண்ணுருக்கொண்டு, அக்ஷமாலையும் அங்குசமும் தரிப்பவளாயும்,வீணையும் புஸ்தகமும் தரிப்பவளாயும் அவள் விளங்கினாள். அவளுக்கும் (மஹாலக்ஷ்மியாகிய) அவள் (பின்வரும்) நாமங்களை அளித்தாள்.

    16. மஹாவித்யா ,மஹாவாணீ, பாரதீ, வாக்கு, ஸரஸ்வதீ, ஆர்யா, ப்ராஹ்மீ, காமதேனு, பீஜகர்ப்பா, தீச்வரீ (புத்தியை ஆள்பவள்).

    17. பின்னர் மஹாகாளியையும் ஸரஸ்வதியையும் நோக்கி மஹாலக்ஷ்மியானவள், தேவிமார்களே ! நீங்களிருவரும் உங்களுடைய குணங்களுக்கியைந்த இரட்டை (ஆண்-பெண்) வடிவங்களைத் தோற்றுவித்தல் வேண்டும் என்று கூறினாள்.

    18. அவர்களிடம் இவ்வாறு கூறிவிட்டு மஹாலக்ஷ்மி தானும் பொன் போன்ற நிர்மல ஞானமாகிய  கருவினின்று தோன்றி (பொன் போன்று) பிரகாசிப்பவர்களும், தாமரையில் வீற்றிருப்பவர்களுமான ஸ்திரீ-புருஷ இரட்டை வடிவத்தைத் தோற்றுவித்தாள்.

    19. அந்தப் புருஷனை பிரம்மா, விதி, விரிஞ்சி, தாதா எனவும்,அந்த ஸ்திரீயை, ஸ்ரீ, பத்மாகமலா, லக்ஷ்மீ,மாதா எனவும் பெயரிட்டழைத்தாள்.

    20. மஹாகாளியும் ஸரஸ்வதியும் அவ்வாறே இரட்டைகளை ஒரே சமயத்தில் சிருஷ்டித்தனர். அவர்களுடைய ரூபங்களையும் நாமங்களையும் உனக்குக் கூறுகிறேன்.

    21. கருத்த கழுத்தும்,சிவந்த புஜங்களும்,வெளுத்த உடலும், தலையில் சந்திரனையுமுடைய புருஷனையும், வெண்மையான நிறத்தினளான ஸ்திரீயையும் மஹாகாளி தோற்றுவித்தாள்.

    22. அந்தப் புருஷன் (நாமங்கள்) ருத்ரன், சங்கரன், ஸ்தாணு, கபர்த்தீ, த்ரிலோசன.அந்த ஸ்திரீ, த்ரயீ, வித்யா ,காமதேனு, பாஷா அக்ஷரா, ஸ்வரா.

    23. அரசே ! பொன்மஞ்சள் நிறத்தினளான ஸ்திரீயையும் கருப்பு நிறத்தினனான புருஷனையும் ஸரஸ்வதி சிருஷ்டித்தாள்.அவர்களுடைய நாமங்களையும் உனக்குக் கூறுறேன்.

    24. (புருஷன்) விஷ்ணு, கிருஷ்ணன், ஹ்ருஷீகேசன், வாஸுதேவன், ஜனார்தனன். (ஸ்த்ரி)உமா, கௌரீ, ஸதீ, சண்டீ, ஸுந்தரீ, ஸுபகா,சிவா.

    25. இங்ஙனம் தோன்றிய ஸ்திரீகள் உடனே ஆண்மையை அடைந்தனர்.(இது எங்ஙனமென்று ஞானக்)கண் படைத்தோர் காண்பர்,அதை யறியமாட்டாத ஏனையோர் காணமாட்டார்கள்.

    26. அரசே ! த்ரயீ எனப் பெயர் கொண்ட ஸரஸ்வதியை (ஆதிசக்தியான) மஹாலக்ஷ்மியானவள் பிரம்மாவுக்குப் பத்தினியாகவும், வரத்தை யளிக்கும் கௌரியை ருத்திரனுக்கும், ஸ்ரீதேவியை வாசுதேவனுக்கும் கொடுத்தாள்.

    27. ஸரஸ்வதியுடன் சேர்ந்து பிரம்மா அண்டத்தைப் பிறப்பித்தார். வீரியவானான ருத்திர பகவான் கௌரியுடன் கூடி அதை உடைத்தார்.

    28. அரசே ! அந்தப் பிரம்மாண்டத்தின் மத்தியில் பிரதானம் (மஹத் தத்துவம்) முதலிய சிருஷ்டித் தொகுதி, மஹா பூதங்களின் வடிவான ஸ்தாவர ஜங்கம உலகனைத்தும் அடங்கலாகத் தோன்றிற்று.

    29. கேசவன் லக்ஷ்மியுடன் கூடி அதைப் போஷித்துக் காப்பாற்றினார்.கௌரியுடன் கூடி மகேசுவரன் உலகனைத்தையும் (ஸம்ஹார காலத்தில்) அழித்தார்.

    30. மகாராஜனே ! (ஆதிசக்தியான) மஹாலக்ஷ்மியானவள் ஸத்துவமனைத்தின் வடிவாகியவள், ஸத்துவமனைத்திற்கும் ஈசுவரி. நிராகாரமாகவும் ஸாகாரமாகவும் பல பெயர்களைத்தரித்து விளங்குபவள் அவளே. (ஸத், சித், ஆனந்தம், மகாமாயை முதலிய) வெவ்வேறு பெயர்களால் அவள் நிரூபிக்கப்படுகின்றாள் ; (மஹாலக்ஷ்மீ என்று) பிரசித்தமான ஒரு பெயரால் மட்டுமோ பிரத்தியக்ஷப்பிரமாணம் முதலிய ஸாதனங்களாலோ நிரூபிக்க இயலாதவள். இங்ஙனம் பிராதானிக ரஹஸ்யம் முற்றிற்று

    4. வைக்ருதிக - ரஹஸ்யம்

    ரிஷி கூறியது: 1. அரசே ! முக்குணவடிவான எந்த ஆதிசக்தியான (மஹாலக்ஷ்மீ) தேவியானவள் தாமஸீ (மஹாகாளி) யாகவும் ஸாத்விகீ (மஹாஸரஸ்வதி)யாகவும் மூன்றாகப் பிரித்துக் கூறப்பட்டாளோ அவளே சர்வா, சண்டிகா, துர்க்கா, பத்ரா, பகவதீ என்று கூறப்படுகிறாள்.

    2. தமோகுணப் பிரதானசக்தியான மஹாகாளி பகவான் விஷ்ணுவின் யோக நித்திரை எனக் கூறப்படுகின்றாள். மது கைடபர்களை அழிப்பதற்காக அந்த சக்தியைத்தான் பிரம்மா துதித்தார்.

    3. பத்து முகங்களுடனும்,பத்து புஜங்களுடனும்,மை போன்று கருத்த பத்துப் பாதங்களுடனும்,பரந்த முப்பது கண் வரிசையுடனும் அவள் விளங்குகிறாள்.

    4. அரசே ! பிரகாசிக்கின்ற பற்களுடனும்,தெற்றிப்பற்களுடனும் அவள் பயங்கர வடிவினள். எனினும் ரூபம்,ஸெளபாக்கியம், காந்தி முதலிய பெருந் திருவிற் கெல்லாம் இருப்பிட மாகியவள்.

    5. கத்தி, அம்பு, கதை, சூலம், சக்கரம், பாசம், புசுண்டி,பரிகம், வில், ரத்தந்தோய்ந்த தலை இவற்றைத் தரிப்பவள்.

    6. இந்த மஹாகாளியே கடக்க முடியாத வைஷ்ணவீ மாயையாகின்றாள். பூஜிக்கப்பட்டால் பூஜிப்பவனுக்குச் சராசரமனைத்தையும் வசமாக்குவாள்.

    7. எல்லா தேவர்களுடைய சரீரங்களினின்றும் வெளிப் போந்து திரண்ட எல்லையிலாக் காந்தியே உருவாய்க்கொண்டவள் எவளோ அவளே முக்கண (பிரகிருதி)வடிவினளான மஹாலக்ஷ்மி ; நேரில் மஹிஷாசுரனைக் கொன்றவள்.

    8. வெள்ளை முகமும், கருத்த புஜங்களும், வெண்மை மிக்க ஸ்தண மண்டலங்களும்,சிவந்த இடையும், சிவந்த பாதங்களும், கருத்த துடைகளும் கால்களும் உடையவளாய் (யௌவனத்தின்) மதம் மிகுந்து காண்பவள்.

    9. அழகிய இடுப்புடையவள்; விசித்திரமான மாலைகளும், வஸ்திரங்களும்,ஆபரணங்களும் அணிந்தவள். சந்தனப்பூச்சினால் அழகியவள். காந்தி, ரூபம், ஸெளபாக்கியம் இவற்றல் ஒப்பற்று விளங்குபவள்.

    10. ஆயிரம் (கணக்கற்ற) கைகளுடையவளாயினும் அவள் பதினெட்டுக் கைகளுடைவளாய்ப் பூஜித்தற்குரியவள். வலதுபக்கத்துக் கீழ்க்கையினின்று வரிசையாக (அவள் ஏந்தும்) ஆயுதங்கள் இனிக் கூறப்படுகின்றன.

    11,12. அக்ஷமாலை, தாமரை, அம்பு, கத்தி,வஜ்ரம், கதை, சக்கரம், த்ரிசூலம்,கோடரி, சங்கம், மணி, பாசம், வேல், தண்டம், கேடயம், வில், பானபாத்திரம், கமண்டலு ஆகிய இவ்வாயுதங்களால் அலங்கரிக்கப்பெற்ற புஜங்களுடன் கமலாஸனத்திலிருப்பவள்.

    13. அரசே ! எல்லாதேவர்களின் வடிவாகியவளும்,எல்லோரையும் ஆள்பவளுமான இந்த மஹாலக்ஷ்மியைப் பூஜிக்கும் அவன் எல்லா உலகங்களுக்கும் எல்லா தேவர்களுக்கும் பிரபு ஆவான்.

    14. ஸத்துவ குணத்தை அடிப்படையாய்க் கொண்டு கௌரியின் தேகத்திலிருந்து உண்டாகியவள் எவளோ அவள் ஸரஸ்வதி எனப்படுபவள் ; நேரில் சும்பாஸுரனை வதைத்தவள்.

    15. அரசே ! (அவள்) எட்டுக் கைகளுடையவளாய், அம்பு, உலக்கை, சூலம், சக்கரம், சங்கம், மணி, கலப்பை, வில் இவற்றை ஏந்தியவள்.

    16. நிசும்பனை வதைத்தவளும் சும்பாஸுரனை ஸம்ஹரித்தவளுமான இந்த தேவி பக்தியுடன் நன்கு பூஜிக்கப்பட்டால் அனைத்தையும் அறியும் வல்லமையை அளிக்கிறாள்.

    17. அரசே ! இவ்வாறாக உனக்கு மூர்த்திகளின் ஸ்வரூபங்கள் கூறப்பட்டன. ஜகன்மாதாவின் (மஹாலக்ஷ்மியின்) உபாஸனாக்கிரமும் அவ்வாறே மஹாகாளீ முதலிய மூர்த்திகளின் உபாஸனாக்கிரமும் தனித்தனியே கேட்டறிந்து கொள்வாய்.

    18. எப்போது (நான்கு கைகளுடன் கூடிய)மஹாலக்ஷ்மி பூஜிக்கப்படுகின்றாளோ (அப்போதே அவளுக்கு)வலது பக்கத்தில் (நான்கு கைகளுடன்) மஹாகாளியும் இடது பக்கத்தில் (நான்கு கைகளுடன்) மஹா ஸரஸ்வதியும் பூஜிக்கப்பட வேண்டும். இவர்களுக்குப் பின்புறம் இரட்டை வடிவங்கள் மூன்றும் (பூஜிக்கப்பட வேண்டும்.)

    19. நடுவில் ஸரஸ்வதியுடன் பிரம்மாவும், வலதுபுறம் கௌரியுடன் ருத்திரனும், இடதுபுறம் லக்ஷ்மியுடன் விஷ்ணுவும் பூஜிக்கப்படவேண்டும். (முன் வரிசையிலுள்ள தேவிமார்களுக்கு) முன்புறத்தில் (இனிக் கூறப்படும்) மூன்று தேவதைகளும் (பூஜிக்கப்படவேண்டும்.)

    20. நடுவில் பதினெட்டுக் கைகளுடன் கூடிய (மத்தியம சரித்திர லக்ஷ்மியின்) மூர்த்தியும், அவளுக்கு இடது பக்கத்தில் பத்து முகங்களுடன் கூடிய (ப்ரதம சரித்திர மஹாகாளியின்)மூர்த்தியும், வலது பக்கத்தில் எட்டுக் கைகளுடன் கூடிய (உத்தம சரித்திர ஸரஸ்வதியின்) மூர்த்தியுமாக இவ்வாறு (ஆதி சக்தியான)பெருமை மிக்க லக்ஷ்மியை (அம்ச தேவதைகளுடன்)பூஜிக்க வேண்டும்.

    21-23. அரசே ! பதினெட்டுக் கைகளுடன் கூடிய லக்ஷ்மியையோ  பத்து முகங்களுடன் கூடிய காளியையோ, எட்டு புஜங்களுடன் கூடிய ஸரஸ்வதியையோ, பூஜை செய்யும் போது அவர்களுக்கு வலது பக்கத்திலும், இடது பக்கத்திலும்,எல்லா துர்நிமித்தங்களுக்கும் சாந்தியாக கால தேவதையும் மிருத்யு தேவதையும் பூஜிக்கப்பட வேண்டும். சும்பாஸுரனைச் சம்ஹரித்த அஷ்டபுஜ தேவியைப் பூஜிக்கும்போது அவளுடைய ஒன்பது சக்திகளும் ருத்திரரும் விநாயகரும் பூஜிக்கப்பட வேண்டும்.நமோ தேவ்யை எனும் ஸ்தோத்திரத்தால் மஹாலக்ஷ்மியைப் பூஜிக்க வேண்டும்.

    24,25. மூன்று அவதாரங்களையும் பூஜிக்கும்போது அந்தந்த அவதாரத்தைப் பற்றிய (சரித்திரத்திலுள்ள) ஸ்தோத்திரங்களையும் மந்திரங்களையும் உபயோகிக்க வேண்டும். (எவ்வாற்றாலும் முக்கியமாய்) பூஜித்தற்குரியவள் பதினெட்டு புஜங்களுடன் கூடியவளும் மஹிஷாஸுரமர்த்தினியுமான மஹாலக்ஷ்மியே யாவள். அவளே மஹாலக்ஷ்மியும் மஹாகாளியும்; அவளேதான் ஸரஸ்வதி எனக் கூறப்படுபவளும், புண்ணிய பாவங்களுக்கு ஈசுவரியும் ஸர்வலோக மஹேசுவரியும்.

    26. மஹிஷாஸுர மர்த்தினீ எவனால் பூஜிக்கப்படுகின்றாளோ அவன் உலகத்திற்குப் பிரபுவாய் விளங்குவான். ஆகையால் ஜகத்தாத்ரியும் பக்தர்களிடம் வாத்ஸல்யமுள்ளவளுமான சண்டிகாதேவியை (விசேஷமாய்) பூஜித்தல் வேண்டும்.

    27,28. அரசே ! அர்க்கியம் முதலியவற்றாலும் அலங்காரம் கந்தம், புஷ்பம், அக்ஷதை, தூபம், தீபம், பலவகை இன்பண்டங்களுடன் நைவேத்தியம், ரத்தந் தோய்ந்தபலி மாம்ஸம், மது முதலியவற்றாலும், நமஸ்காரம், ஆசமனீயம், நல்ல வாசனையுடைய சந்தனம் கற்பூரத்துடன் கூடிய தாம்பூலம், ஆகியவற்றாலும் அன்பு கசிந்த மனத்துடன் பூஜிக்க வேண்டும்.

    29-30. தேவிக்கு எதிரில் இடது பக்கம் தேவியினால் தலை வெட்டப்பட்ட மஹா அசுரனும் தேவியினால் ஸாயுஜ்யப் பதவியளிக்கப்பட்டவனுமான மஹிஷாசுரனைப் பூஜிக்கவேண்டும். வலதுபக்கம் எதிரில் பரிபூர்ணமான தர்மத்தின் அதிதேவதையான ஸிஹ்மத்தைப் பூஜிக்க வேண்டும்.

    31. சராசரப் பிரபஞ்சத்தைத் தாங்குவதாய் (பாவித்து) தேவியின் வாகனத்தைப் பூஜிக்கவேண்டும். புத்திமானான புருஷன் (அதன் பின்) ஏகாக்கிர மனதுடன் அவளுடைய ஸ்தோத்திரத்தைச் செய்யவேண்டும்.

    32. பின்னர் கைகூப்பிக்கொண்டு இச்சரித்திரங்களால் துதிக்கவேண்டும் ; அல்லது மத்தியம் சரித்திரம் ஒன்றினால் மட்டுமாவது (துதிக்கலாம்) ; மற்ற இரண்டு சரித்திரங்களில் ஒன்றினால் மட்டும் இங்கு துதிக்கப்படாது.

    33,34. சரித்திரத்தின் பாதியை (குறையாக)ஜபிக்கக்கூடாது. அதனால் ஜபம் குறைபாடுடையதாக (பயனற்றதாக) ஆகும்.பிரதக்ஷிணங்களும் நமஸ்காரங்களும் செய்து தலைமேல் கைகூப்பிக்கொண்டு சோம்பலின்றி உலகத்தைத் தாங்கும் அன்னையிடம் (எல்லா அபராதங்களுக்கும்) மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கோரவேண்டும். ஒவ்வொரு சுலோகத்தாலும் எள்ளும் நெய்யும் கலந்த பாயஸத்தை ஹோமம் செய்ய வேண்டும்.

    35. (இங்ஙனம் செய்ய இயலாதவர்) ஸ்தோத்திர மந்திரங்களால் மட்டுமாவது சண்டிகைக்கு மங்களகரமான ஹவிஸ்ஸை ஹோமம் செய்யவேண்டும். (பின்னர்) மீண்டும் ஒன்றுபட்ட மனத்துடன் தேவியை நாம மந்திரங்களால் பூஜிக்க வேண்டும்.

    36. மேலும் அடக்கத்துடன் கைகூப்பித் தலைசாய்ந்து வணங்கி மனத்தில் சண்டிகா பரமேசுவரியை ஸ்தாபித்து நீண்டகாலம் தியானத்திலிருந்து தன்மயமாகவேண்டும்.

    37. இவ்வாறாக எவன் பக்தியுடன் தினந்தோறும் பரமேசுவரியைப் பூஜிக்கின்றானோ,அவன் விரும்பிய போகங்களையெல்லாம் அனுபவித்து தேவியின் ஸாயுஜ்யப் பதவியை எய்துவான்.

    38. எவன் பக்தர்களிடம் வாத்ஸல்யம் பூண்ட சண்டிகா தேவியை நாள்தோறும் பூஜிப்பதில்லையோ அவனுடைய புண்ணியங்களைச் சாம்பலாக்கிப் பரமேசுவரியானவள் அவனை (தாபத்திரயத்தால்)எரிப்பாள்.

    39. அரசே ! ஆகையால் ஸர்வலோக மகேசுவரியான சண்டிகையைக் கூறப்பட்ட முறைப்படி பூஜிப்பாய்.(அதனால்) இன்பத்தை அடைவாய். இங்ஙனம் வைக்ருதிக -ரஹஸ்யம் முற்றுற்று.

    5.மூர்த்தி - ரஹஸ்யம்

    ரிஷி கூறியது : 1. எந்த பகவதியானவள் நந்தா என்ற பெயருடன் நந்தனுடைய புத்திரியாகத் தோன்றப் போகிறாளோ அவள் பக்தியுடன் துதிக்கப்பட்டுப் பூஜிக்கப்பட்டால் மூவுலகையும் வசமாக்குவாள்.

    2. அந்த தேவியானவள் பொன்போன்று அழகாய் ஒளி வீசும் ஆடையும் சிறந்த பொன்னணியும் அணிந்து பொன் நிறத்தினளாய்ப் பொன்போல் ஒளிர்பவள்.

    3. தாமரையும், அங்குசமும், பாசமும், சங்கமும் அலங்கரிக்கும் நான்கு கைகளையுடையவள். அவளே இந்திரா, கமலா, லக்ஷ்மீ. ஸ்ரீ, பொற்றாமரையில் வீற்றிருப்பவள்.

    4. பாவமற்றவனே ! (முதலில்) ரக்ததந்திகா எனப் பெயர் பூண்டவள் என எந்த தேவியைக் கூறினேனோ அவளுடைய ஸ்வரூபத்தைக் கூறுகிறேன்,கேட்பாய். (அது) பயமனைத்தையும் போக்குவது.

    5,6. சிவப்பு வஸ்திரம், சிவப்ப வர்ணம், அங்கபூஷணங்களெல்லாம் சிவப்பு ; சிவப்பான ஆயுதம், சிவந்த கண்,செம்பட்டை மயிர் ; மிகவும் பயங்கர வடிவம் ; கிவந்ததும் கூறியதுமான நகங்கள் ; சிவந்த பற்கள் ; (அதனால்) ரக்ததந்திகா எனப் பெயர் கொண்டவள். பதிவிரதா ஸ்திரீயானவள் பர்த்தாவுக்கு அன்புடன் பணிசெய்வதுபோல் தேவியானவள் பக்த ஜனங்களைச் சேவிக்கவும் செய்வாள்.

    7,8. அவள் (வடிவத்தில்) பூமியைப்போல் விசாலமானவள் ; மேருவைப்போல் உயர்ந்து அகன்று மிகவும் பருத்து மனோகரமான இரு ஸ்தனங்களையுடையவள்.கடினமாய் வெகு கமனீயமாய் எல்லா இன்பங்களையும் சுரக்கும் அந்த ஸ்தனங்கள் ஆனந்த மெல்லாம் உட்கொண்ட பாற்கடல். அவற்றால் தேவியானவள் பக்தர்களுக்குப் பாலூட்டுவாள்.

    9. கத்தி, பானபாத்திரம், உலக்கை, கலப்பை இவற்றைத் தரிக்கும் அந்த யோகீசுவரியான தேவி ரக்தசாமுண்டா எனப்படுகின்றாள்.

    10. இவளால் சராசரப் பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கப்பட்டுள்ளது. இவளை எவன் பக்தியுடன் பூஜிக்கின்றானோ அவன் சராசரத்தை வியாபிப்பான்.

    11. ரக்ததந்தா தேவியின் வடிவ ஸ்துதியாகிய இதை எவன் தினந்தோறும் படிக்கின்றானோ அவனுக்குத் தேவியானவள் பர்த்தாவுக்குப் பிரியமான ஸ்திரீயைப்போல் பணி விடையும் செய்வாள்.

    12. சாகம்பரீதேவி நீலவர்ணமானவள், கருநெய்தல் போன்ற கண் படைத்தவள், கம்பீரமான நாபியுடையவள்,மூன்று மடிப்புகளால் அலங்கரிக்கப்பட்ட குறுகிய வயிறுடையவள்.

    13-15. கடினமாய்ச் சமமாய் வட்டமாய்ப் பெரிதாய்ப் பருத்து எழுந்த ஸ்தனங்களை உடையவள். கமலாஸனத் துறைபவள். கமலத்தையும், கைப்பிடி நிறைய அம்புகளையும், விரும்பப்படும் ரஸங்களுடன் கூடியதும் பசி தாகம் சாக்காடு முதலிய பயங்களைப் போக்குவதுமான புஷ்பம், தளிர், வேர், பழம் முதலியவற்றின் கதம்பத்தையும், ஒளிவீசும் வில்லையும் பரமேசுவரி (நான்கு கைகளிலும்)கொண்டுள்ளாள். சாகம் பரியாகிய அவளே சதாக்ஷி யெனப்படுபவள். துர்க்கா எனப் போற்றப்படுவளும் அவளே.

    16. சோகமற்றவள் ; துஷ்டர்களை யடக்குபவள் ; பாவங்களையும் விபத்துக்களையும் போக்குபவள் ; அவளே உமா, கௌரீ, ஸதீ, சண்டீ, காளிகா, பார்வதீ.

    17. சாகம்பரீ தேவியைத் துதித்தும், தியானித்தும், ஜபித்தும், பூஜித்தும், நமஸ்கரித்தும் ஒருவன் விரைவில் அன்னபான ஸமிருத்தியையும் அழிவற்ற அமிருதப் பதவியையும் பயனாய் அடைவான்.

    18. பீமா தேவியானவள் நீலவர்ணமானவள் ; அவள் கடைப்பற்களுடனும் வாய்ப்பற்களுடனும் பிரகாசிப்பவள்.பரந்த கண்படைத்தவள்.வட்டமான பருத்த ஸ்தனங்களுடைய பெண் வடிவினள்.

    19. சந்திரஹாஸம் (கத்தி),உடுக்கை, பானபாத்ரம், இவற்றைத் தரிப்பவள் ; ஏகவீரா, காலராத்திரி, காமதா என அவளே துதித்துப் போற்றப்படுகின்றாள்.

    20. ப்ராமரீ தேவியானவள் ஒளிப் பிழம்பால் சூழப்பட்டுக் கண்ணெடுத்துப் பார்க்க முடியாதவள்.விசித்திரமான காந்தி பொருந்தியவள்.அழகிய சந்தனப் பூச்
    சுடையவள் ; விசித்திரமான ஆபரணங்களால் அலங்கரிக்கப் பெற்றவள்.

    21,22.  விசித்திரமான வண்டு ஒன்றைக் கையில் உடையவள் ; அவள் மகாமாரி எனப் போற்றப்படுகிறாள். அரசே ! இங்ஙனம் ஜகன்மாதாவான சண்டிகா தேவியின் வடிவங்களாகிய எவை கூறப்பட்டனவோ அவை (எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்விக்கும்)காமதேனுக்கள் எனப் போற்றப்படுகின்றன. இது மிகவும் ரகசியம். எவர்க்கும் உன்னால் சொல்லத் தக்கதன்று.

    23. (தேவியின்) திவ்ய மூர்த்திகளைப்பற்றிய இவ்வரலாறு வேண்டும் பயனை அளிக்கவல்லது. ஆகையால் முழுமுயற்சியுடன் இடைவிடாது தேவியை ஜபிப்பாயாக.

    24. ஏழு பிறவிகளில் குவித்த பிரம்மஹத்திபோன்ற கொடிய பாவங்களைத்தினின்றும் (இந்த ஸப்தசதீ)மந்திரங்களைப் படித்த மாத்திரத்தாலேயே (ஒருவன்)விடுபடுகிறான்.

    25. தேவியின் தியானம் என்னால் (இங்ஙனம்)விளக்கிக் கூறப்பட்டது.(இது) இரகசியங்களுள் மகத்தான அதிரகசியம்.ஆகையால் எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்விக்கும் இதை எல்லா முயற்சியாலும் போற்றவேண்டும். இங்ஙனம் மூர்த்தி-ரஹஸ்யம் முற்றிற்று
    தேவீமாஹாத்மிய உத்தர பாகம் முற்றிற்று

    அநுபந்தம்  2

    துர்க்கா ஸூக்தம்

    1. அக்கினி வடிவில் விளங்கும் சக்திக்கு ஸோமரஸத்தைப் பிழிந்து தருவோம்.அனைத்தையும் அறியும் அந்த சக்தி எமது பகைமைகளைப் பொசுக்கட்டும். அது எமது எல்லா ஆபத்துக்களையும் போக்கட்டும்.கப்பலால் கடலைக் கடப்பது போல் பாவக் கடலிலிருந்து அக்கினி சக்தி நம்மை அக்கரை சேர்க்கட்டும்.

    2. செந்நீ வண்ணத்தினளும்,தனது ஒளியால் (பகைவர்களை) எரிப்பவளும்,ஞானக்கண்ணால் காணப்பட்டவளும், கருமபலனைக் கூட்டிவைப்பவளுமான துர்க்காதேவியை நான் சரணடைகின்றேன்,பிறவிக்கடலை எளிதில் கடத்துவிப்பவளே ! கடத்துவிக்கும் உனக்கு நமஸ்காரம்.

    3. அக்கினி சக்தியே ! போற்றத்தக்க நீ எங்களை நல்ல உபாயங்களால் எல்லா ஆபத்துக்களினின்றும் கரை யேற்றுவிக்க வேண்டும்.எங்களுக்கு வாசஸ்தலமும் விளைபூமியும் நிறையக் கூட்டிவைக்க வேண்டும். (எங்கள்)புத்திரர்களுக்கும் பௌத்திரர்களுக்கும் நன்மை அளிக்க வேண்டும்.

    4. ஆபத்தைப் போக்கும் அக்கினி சக்தியே ! கப்பலால் கடலைக் கடப்பதுபோல் எங்களை எல்லாப் பாவங்களினின்றும் கடத்துவிப்பாய். அக்கினி சக்தியே ! அத்ரி மகரிஷியைப் போல் அனைவரும் இன்புறுமாறு மனதார அனுக்கிரகித்துக் கொண்டும் எங்களுடைய உடலை இரஷித்துக்கொண்டும் இருக்கவேண்டும்.

    5. எதிரிகளின் சேனைகளை வெல்லுவதும், அடக்குவதும் உக்கிரமானதுமான அக்கினி சக்தியைப் பரமபதத்திலிருந்து அழைக்கின்றோம்.அச்சக்தி எல்லா ஆபத்துக்களையும் போக்குவதாகுக. அக்கினிதேவன் நமது பாவங்களைப் போக்கி குற்றங்களை மன்னிக்கட்டும்.

    6. அக்கினியே ! யாகங்களில் போற்றப்பெறும், நீ இன்பத்தை வளர்க்கின்றாய். கருமபலனை அளிப்பதும் ஹோமத்தைச் செய்வதும் ஸ்தோத்திரம் செய்யப்படுவதும் நீயே ஆகின்றாய். அக்கினி சக்தியே, உனது உடலையும் ஹவிஸ்ஸினால் இன்புறச் செய்து எங்களுக்கும் எல்லா ஸெளபாக்கியங்களையும் அருள்வாய்.

    7. இந்தரனிடம் விளங்கும் சக்தியே ! பாவத் தொடர் பின்றி பாவனமான பொருட்களுடன் கடி அமிருதத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு எங்கும் பரவி நிற்கும் உன்னைச் சேவிக்கிறேன். சுவர்க்கத்தின் உச்சியில் வசிக்கும் தேவர்கள் விஷ்ணு பக்தனான என்னை இவ்வுலகிலிருக்கும்போதே பேரின் பத்துக்குரியவனாக்குதல் வேண்டும்.

    8. கன்னியாகவும் குமரியாகவும் உள்ள தேவியைத் தியானிக்கின்றோம். பரமேசுவரனுக்காகவே தோன்றி பரமேசுவரனை யடைந்த அவளை வழிபடுகின்றோம். அந்த துர்க்கா தேவி எங்களை நல்வழியில் செலுத்தி ஆட்கொள்ள வேண்டும்.
    அக்கினியையும் இந்திரனையும் வேண்டுவதும் அவர்களுடைய சக்திக்கு அதிதேவதையாய் விளங்கும் துர்க்கையை வேண்டுவதேயாகும் என்பதும், விஷ்ணுவிடம் பக்தி செய்வதும் தேவியிடம் பக்தி செய்வதேயாகும் என்பதும் இந்த ஸூக்கத்தினால் பெறப்படுகிறது.
    

    No comments:

    Post a Comment