Tuesday, December 9, 2014

மன்னன் மாளிகை மண்மேடு ஆனாலும் !



                             

இது  மன்னர் இராஜேந்திர சோழன் மாளிகை இருந்த இடம் !
"மாளிகைமேடு "என்று இந்த இடத்தைக் குறிப்பிடுகிறார்கள்.

மன்னன் ராஜேந்திரன் சோழன் இருந்த மாளிகை  மண்ணாகிப் போனபின் அதை ’மாளிகைமேடு’ என்று இப்போது அழைக்கிறார்கள். கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து  2 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு போய் இருந்தோம்.

            அருள்மிகு பிரகதீஸ்வரர்ஆலயம், கங்கைகொண்ட சோழபுரம். 

மன்னனின் மாளிகை மண்மேடு ஆனாலும் மகேசனின் வீடு காலத்தால் அழியாத நினைவுச் சின்னமாக மன்னன் புகழ்பாடுதே! 

மன்னர்கள், தன் மாளிகையைவிட மகேசன் வீட்டை அப்படி அழகாய் அற்புதமாய் காலத்தால் அழிக்கமுடியாதபடி கட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.  அவற்றைப் பராமரிக்க நிலங்கள், அளித்திருக்கிறார்கள். அந்நியப்படையெடுப்புகளால் சீர் குலைந்தாலும் இன்றும் மன்னரின் பெருமையைப் பேசிக் கொண்டு இருக்கிறது கோவில்.

இப்போது மன்னன் ராஜேந்திரன் அரியணை ஏறிய நாளை விழாவாக கொண்டாடினார்கள். எல்லோரும் அதைப்பற்றி எழுதி விட்டார்கள்.

நாங்கள் ஜனவரி 1ம் தேதி கங்கைகொண்டசோழபுரம் போவது என்று வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் போய் வருவோம்.அப்படி உறவுகளுடனும், நட்புகளுடனும் கங்கை கொண்டசோழபுரம் சென்றதைப் பற்றி  என் மலரும் நினைவுகளைப் பற்றி  கொஞ்சம்  பகிர்கிறேன். 

 நாங்கள் கார் வாங்குவதற்கு முன்பு  மாயவரத்திலிருந்து இரும்புலிகுறிச்சி செல்லும் பேருந்தில் கங்கைகொண்டசோழபுரம் போவோம். காலை 8.30க்கு கிளம்பினால் 9.30க்கு கங்கை கொண்டசோழபுரம் போகும். காலை உணவை கையில் எடுத்துக் கொள்வோம்.  அங்கு போய் சாமி தரிசனம் ஆனபின் உணவை முடித்துக் கொண்டு மீண்டும் 12.30க்கு   இரும்புலிகுறிச்சிப் பேருந்து திரும்பி வரும்போது அதில் ஏறி  மாயவரம் வந்து விடுவோம்.

மகன் எங்களுடன் வந்தாலும், அடிக்கடி தன் நண்பர்களுடன் சென்றுவருவார். பக்கத்து வீட்டுக்குழந்தைகள், அவர்களுடன் உடன் படிப்பவர்கள் எல்லாம்  எங்களுடன் கங்கைகொண்டசோழபுரத்திற்கு வருவார்கள். மகிழ்ச்சியான குதூகலமான காலம் அவை. இப்போது அவர்கள் எல்லாம் வெளிநாட்டிலும், வெளியூரிலும் இருக்கிறார்கள். ஜனவரி 1ம் தேதி போன் செய்து வாழ்த்து சொல்லிவிட்டு,  சேர்ந்து கங்கைகொண்டசோழபுரம் போன நினைவுகளை பேசுவார்கள். "மறுபடியும் நாம் சேர்ந்து ஒரு நாள் அங்கு போவோம்" என்பார்கள். 

அப்போது  எல்லாம் கோவிலின் மேல்தளத்திற்குப் போய்ப் பார்க்கலாம். ஒரு நபருக்கு இவ்வளவு(இரண்டு ரூபாய் என்று நினைக்கிறேன்) என்று கட்டணம்  உண்டு.  அழைத்துச் செல்ல கோவில் சிப்பந்தி உண்டு அவர் நம்மை மேல்தளத்திற்கு அழைத்துச் சென்று காட்டுவார்.  கோவிலின் உள் வாசல் பக்கத்தில் படிகள் இருக்கும். சதுரம் சதுரமாய் உயர உயரமாய் படிகள் இருக்கும். அதில் ஏறி மேல்தளத்திற்குச் சென்றால், அதன் சேதமுற்றிருந்த தரைப்பகுதியின் வழியாக, கீழே கருவறையில் உள்ள பிரகதீஸ்வரர் திருவுருவத்தின் உச்சிப் பகுதி தெரியும்.  

மொட்டைக்கோபுர வாசலில் உள்ள  படிவழியாக அதன் மேல்தளம் எல்லாம் பார்க்க அனுமதி உண்டு. இப்போது அதற்கு கம்பிகேட் போட்டு மூடி விட்டார்கள் .மேல்தள அனுமதி இல்லை.  

கீழே ஸ்வாமி இருக்கும் கருவறையைச்  சுற்றி ஒரு சிறிய பிரகாரம் உள்ளது. அங்கு ஒரே இருட்டாக இருக்கும்.முன்பெல்லாம் சுற்றி வரலாம். அழைத்து செல்லும் பணியாள்  டார்ச் வெளிச்சத்தில் அழைத்து செல்வார், அப்போது சிறிது நேரம் அந்த விளக்கை அணைத்து விட்டுச் சொன்னார்," இருட்டு எப்படி இருக்கிறது? பிரளய காலத்தில் எங்கும் இருட்டு இப்படித்தான் இருந்ததாம் அதை உணர்த்தவே விளக்கு எதுவும் போடவில்லை" என்பார். 

இப்போது அங்கு விளக்குகள் போட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இப்போது பிரதோஷ காலம், மற்றும் விழாக்கள், ஜனவரி 1ம் தேதி ஆகிய் நேரங்களில் மட்டும் தான்  உள் பிரகாரம் சுற்றி வரலாம். மற்ற நாட்கள் கிடையாது அடைத்து வைத்து இருப்பார்கள், பாதுகாப்பு கருதி. இலிங்கத்தின் அடியில் சந்திரகாந்த கல் வைத்து இருப்பதால் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் மிதவெப்பத்தையும் கொடுக்கும் என்றும் சொன்னார். அதை உணர முடியும்.

இப்போது உணவைக் கொண்டுபோய் சாப்பிடவும் கூடாது.  மக்கள் கூட்டம் அதிகமாய் வர வர கட்டுப்பாடுகள் அதிகமாய் இருக்கிறது.  மக்கள் அங்குள்ள பெரிய கிணற்றில்  குப்பைகளைப் போட்டு விடுகிறார்கள் அதை முன்பு ஒரு பதிவில் படம் எடுத்துப் போட்டு இருக்கிறேன்.சாப்பிட்டு விட்டு  அவற்றையும் சுத்தம் செய்யாமல் அப்படி அப்படியே போட்டு விட்டுப் போய் விடுகிறார்கள் அதனால் இப்போது அதற்கு தடை.  இப்போது கோவில் வளாகம் சுத்தமாய் இருக்கிறது. புற்களையும் செடி கொடிகளையும் வளர்த்துப் பராமரிக்கிறார்கள். குருக்களிடம் சொல்லி விளக்கு போடச் சொல்லிப் பார்த்தால்தான் லிங்கத்திற்கு மேலே கங்கை நீர், செம்புப் பாத்திரத்திலிருந்து சொட்டு ச்சொட்டாய் விழுவது தெரியும். அல்லது தீபாராதனை நேரம் உற்றுப்பார்க்க வேண்டும்


மாளிகை மேட்டில் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிற்பங்களை  கம்பி தடுப்புக்குள் வைத்து இருக்கிறார்கள். அருங்காட்சியத்திலும் சிலவற்றை வைத்து இருக்கிறார்கள். பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் அருங்காட்சியகம் இருக்கிறது. அரசு விடுமுறை நாள் எல்லாம் இதற்கும் விடுமுறை. வேலை நாள் போனால் தான் அருங்காட்சியகம் பார்க்க முடியும்.
விஷ்ணு
நடராஜர்,  சிவகாமி அன்னையால் தன்னைப் போல ஆடமுடியாது என்று சிரிப்பது போல் இல்லை?
அஷ்டபுஜதுர்க்கை
தவறு செய்பவர்களுக்கு என் காலுக்கு அடியில் இருப்பவன் கதிதான் என்று கைவிரலை  கீழ் நோக்கி காட்டுகிறார் இறைவன்.
பிரம்மா, தன் துணைவிகளுடன்
சரஸ்வதி  தாமரை மலரில்.
எதிர்ப் பக்கம் லட்சுமி  தாமரை மலரில்அமைத்து உள்ளார்கள்.
பைரவர்- கீழ்ப்பீடம் முடிவடையவில்லை
வெளிப்புறத்தில் நடைபாதையின் இருமருங்கிலும் மரங்களும் புற்களும் அழகுறப் பராமரிக்கப்படுகின்றன.

முன் மண்டபத்தில் இறைவன் இல்லா சந்நிதி - அதன்பின் புறம் பெரிய விநாயகர் இருக்கும்  சந்நிதி.
ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு புறா -எனக்கும் இங்கு இடம் உண்டு என்று சொல்கிறது.
போரிடும் வீரர்கள்- சிற்பம்
மேலே உள்ள படம் -புதிப்பிப்பதற்கு முன் இருந்த தோற்றம்
கீழே உள்ள படம் -புதுப்பித்த பின் இப்போது உள்ள தோற்றம்

ஸ்வாமி சந்நிதிக்கு ஏறும் படிக்கு மேலே தெரியும் மேல் விதானத்தில் அழகிய வேலைப்பாட்டில் பிள்ளையார்
அம்மன்  - பெரிய நாயகி சந்நிதி


தலவிருட்சம் வன்னி அதன் வளைந்த  கிளையில் முன்பு குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவார்கள்., இப்போது அந்த கிளைக்குமுட்டுக் கொடுத்து அதில் விளையாட முடியாதபடி முட்கள் சுற்றி உள்ளார்கள். புன்னை மரமும் தலவிருட்சம் என்கிறார்கள். சண்டேஸ்வரர் சந்நதி பக்கம் அந்த மரம் இருக்கிறது.

முருகன்- மயில் வாகனத்தில், பிள்ளையார் -
தன் மூஞ்சூறு 
வாகனத்தில்

கோபுரத்தின் பக்கவாட்டில் இருக்கும் தெருப்பக்கத்தில்
 இருந்து
 எடுத்தபடம்

        
மொட்டைக் கோபுர மேல்தளம் செல்லும் படிக்கட்டுகள்- 
 எதிர்புறப் 
படியிலிருந்து எடுக்கப்பட்ட படம் .அங்கும் படிகள் உண்டு.

இப்போது கம்பிக் கதவு போட்டுப்பூட்டிவிட்டார்கள்.
ஸ்வாமி சந்நிதி செல்ல இருபக்கமும் துவாரபாலகர் இருக்கும் அழகிய வாசல்படி     
நாவல் மரத்தில் உள்ள  நாவல் கனியை முதலைமேல் அமர்ந்து பறிக்கும் குரங்கு. குரங்கும், முதலையும்  கதை தெரியும் தானே !  எல்லோருக்கும்.

வானுயர்ந்த கோபுரமும் தட்சிணாமூர்த்தியும்


மரம் செடிகள் இடையே கோபுரக் காட்சி
இறைவனின் ஆனந்த நடனம்

எங்கு இருந்து படம் எடுத்தாலும் அலுக்காத கோபுர தரிசனம்



                                                         கோபுர மேல்தளம்

                                     உள்  கோபுர மேல்தளம் செல்லும் படிகளில்
                                 
                                               கோபுரத்தின் மேல் தளம்
                                 கோபுர மேல்தளத்திலிருந்து எடுத்த படம்

                                   

கோவிலுக்கு செல்லும் மக்களை ஆசீர்வாதம் செய்ய வந்திருக்கும் யானையார்



பல வருடங்கள்  கங்கைகொண்ட சோழபுரம் சென்ற போது எடுத்த  படங்களை இங்கு பகிர்ந்து உள்ளேன். ஒவ்வொரு முறை செல்லும் போதும் வெவ்வெறு தோற்றத்தில் மனதை வசப்படுத்தும் கோவில். மனதுக்கு உற்சாகம் தரும் உடலுக்கு ஆரோக்கியம் தரும்.
                           நந்தி அருகில் உள்ள நாகலிங்கமரத்தில் நாகலிங்கப்பூ.

நாம் இந்த பூவை மனதால் இறைவனுக்கு சமர்ப்பித்து இறைவனின் அருளைப் பெற்று வாழ்வில் எல்லா நலங்களும் பெற்று வாழ்வோம்.

                                                      வாழ்க வளமுடன்
                         ----------------------

No comments:

Post a Comment