Tuesday, January 13, 2015

வளைகாப்பு நடத்தணுமா! உமையாள்புரம் வாருங்க!

பெண்களுக்கு சுகப்பிரசவம் நடக்க, கும்பகோணம் அருகிலுள்ள உமையாள் புரம் காசிவிஸ்வநாதர் கோயில், குங்குமசுந்தரி அம்பாள் சந்நிதியில் வளைகாப்பு நடத்துகின்றனர். 

தல வரலாறு: படைப்புக்கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை அழைத்து யார் என விசாரித்தபோது, "நானே படைப்புக்கடவுள்' என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன், படைப்பிற்கு ஆதாரமான "ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார். சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே முருகன், தனது தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் நிகழ்ந்தது. உபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், "உமையாள்புரம்' எனப்பெயர் பெற்றது.
மற்றொரு வரலாறு: விஜயா என்ற கந்தர்வப்பெண், சிவன் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். அவள், இங்கு தீர்த்தம் உண்டாக்கி சிவதரிசனம் வேண்டி தவமிருந்தாள். சிவன், அம்பாளுடன் காட்சி தந்து, அவளது வேண்டுதலின்படி இங்கேயே எழுந்தருளினார். மகிழ்ந்த விஜயா இங்கு சிவனுக்கு கோயில் எழுப்பினாள். சுவாமிக்கு காசிவிஸ்வநாதர் என்ற பெயர் சூட்டப்பட்டது. 

வளைகாப்பு வைபவம்: குங்குமசுந்தரி அம்பாள் சந்நிதியில் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த கமலா என்ற பெண், அம்பாள் மீது தீவிர பக்தி கொண்டிருந்தாள். ஒருசமயம் அவளது கணவன், தீராத நோயால் பாதிக்கப்பட்டான். அவன் குணமாக வேண்டி அப்பெண், இத்தல அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டாள். அம்பாள் அவளது கணவனின் நோயைக் குணப்படுத்தி அருள் புரிந்தாள். இதனால் அம்பிகைக்கு குங்குமசுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. பெண்கள் தங்களது கணவர் ஆரோக்கியமாக இருக்கவும், திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமையவும் அம்பிகைக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். சந்நிதி முன்பு, கர்ப்பிணிப்பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர். வளையல் உள்ளிட்ட பூஜை பொருட்களை பக்தர்கள் கொண்டு செல்ல வேண்டும். அம்பாள் சந்நிதி எதிரில், ராஜமகா வல்லபகணபதி இருக்கிறார்.

சிறப்பம்சம்: இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வ வனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடிநாதர் கோயில் மற்றும் திவ்யதேசங்களான கபிஸ்தலம், புள்ளபூதங்குடி ஆகியவை உள்ளன. இதன்மூலம், ஒரே நேரத்தில் பல புண்ணியத்தலங்களை தரிசிக்க வசதியிருக்கிறது.
இருப்பிடம்: கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உமையாள்புரம்.
திறக்கும் நேரம்: காலை 5.30- 10.30, மாலை 4.30- இரவு 8.30.
போன்: 0435- 244 1095.

No comments:

Post a Comment