Tuesday, November 11, 2014


இங்கு குளித்தால்: டும்... டும்... டும்... குவா.. குவா நிச்சயம்!

தென் மாவட்டங்களில் வைகையாறு, முல்லை பெரியாறு, காவிரியாறுகளைப் போல பெரியகுளம் வராக நதியும் பிரபலமான ஒன்று. காசியில் கங்கை நதிக்கரையில் இருபுறங்களிலும் ஆண், பெண் மருதமரங்கள் உள்ளன.  இதற்கு அடுத்தாற்போல், தமிழகத்தில் தேனி மாவட்டம் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் அருகே ஓடும் வராகநதியின் இடது கரையில் ஆண் மருதமரமும், வலதுகரையில் பெண் மருதமரமும் உள்ளன. சில மாதங்களுக்கு முன் தொல்லியல்துறை நிபுணர்கள், இந்த மரங்களை ஆய்வு செய்தனர்.  ஆயிரம் ஆண்டு பழமையான மரங்கள் என உறுதிபட குறிப்பிட்டனர். இங்குள்ள ஆண், பெண் மருதமரங்களின் நடுவே ஓடும் வராக நதியில் குளித்துவிட்டு சென்றால், திருமணத் தடைகள் நீங்கி டும் டும் டும் தான், குழந்தை இல்லாதவர்களுக்கு குவா, குவா மற்றும் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நூற்றாண்டு பெருமை வாய்ந்த இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட இக்கோயிலுக்கு, பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். முருகன், வள்ளி, தெய்வானையுடனும் வீற்றிருக்கிறார். பல அவதாரங்களில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சூரியன், சந்திரன், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம்வளர்த்த நாயகி, பைரவர்களும் இங்குள்ளனர். முகூர்த்த நாட்களில் ஏராளமான  திருமணங்கள் நடந்து வருகின்றன. திருவிழாக்களின் முக்கிய விழாவான தேர்த்திருவிழாவின் போது, இரண்டு தேர்கள் வீதி உலா வரும். பக்தர்களின் பரவச கூட்டம் பெருகிநிற்கும். 

No comments:

Post a Comment