Thursday, November 27, 2014

சிங்கத்தின் வாயில் உருளும் எலுமிச்சை!
)
மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கிறது பத்ரகாளியம்மன் திருக்கோயில். எலுமிச்சை விளக்கும் மாலையும் அங்கே அவ்வளவு பிரசித்தம். அதை விட அந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பாக அமைந்திருப்பது அந்தக் கோயிலின் சிற்ப வேலைபாடுகள்.
கற்தூண்களில் காணப்படும் வேலைபாடுகள் அதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. அதற்கு மேலே அங்கே கருங்கல்லினால் செய்யப்பட்ட சிங்கத்தின் சிலை அங்கு வரும் பக்தர்கள் பலரின் கவனத்தையும் ஈர்க்கிறது. அந்த சிங்கத்தின் வாயில் ஒரு எலுமிச்சை என்று சொல்லப்படும் பந்து போன்ற அமைப்பு வாயின் உள்ளே சுற்றிக் கொண்டே இருக்கிறது.இத்தனை அதிசயம் நிறைந்த அந்த கோயிலை தரிசிக்க இப்போதே ஆவலாய் இருக்கிறதல்லவா..!


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து, திருச்செங்கோடு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள "கோட்டைமேடு பத்ரகாளி" திருக்கோயில். இந்த பத்ரகாளிக்கு எலுமிச்சை என்றால் அவ்வளவு பிரியம். எலுமிச்சை மாலை அல்லது எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா பிரச்னைகளையும் தீர்த்து விடுவாள்.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர், கடையேழு வள்ளல்களின் ஆட்சி பகுதியான இங்கு 18 பட்டி முழுவதும் எங்கு பார்த்தாலும் கோட்டைகளாக இருந்துள்ளது. மேலும் பரந்து விரிந்த நிலையில் ஒரு பெரிய ஏரி இந்த பகுதியில் இருந்துள்ளது. ஆனால் சரியான மழை இல்லாமல் ஏரியானது வறண்டு, விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்துள்ளனர்.

“ஒரு நாள் மன்னன் பாரியின் கனவில் தோன்றி, நான் பத்ரகாளி என்றும், நான் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை காக்க ஏரியின் வடது கரையில் மேடான பாறையின் மேல் குடிகொண்டுள்ளதாகவும், இனி ஏரியில் எப்போதும் தண்ணீர் வற்றாது எனவும் கூறி, எனக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை கட்டி உடனடியாக குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாள், காளி”. அகிலத்தையும் காக்கும் நான் மேடான பாறையில் இருப்பேன், இதனால் என்னை மீறி எந்த தவறும் நடக்காது எனவும், நான் தினமும் ஏரியில் குளிக்க வேண்டும் எனவும், அதனால் என்னை தினமும் ஏரிக்கு அழைத்து சென்று குளிப்பாட்ட வேண்டும் எனவும் கூறியிருக்கிறாள்.


‘மன்னன் உடனடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்ட போது எலுமிச்சை பழம் இருந்துள்ளதை கண்டு, கனவில் வந்தது காளிதான் என்று மக்களிடம் கூறி, உடனடியாக பாறையின் மீது ஒரு ஆலயத்தை கட்டியுள்ளார்’. இதனால் கருவறையானது பாறை மீது காளி அமர்ந்தவாறு மேடான பகுதியில் அமைந்துள்ளது. மேலும், இந்த பகுதியில் பலவன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி, தொந்தரவு செய்து வந்துள்ளான். மக்கள் பத்ரகாளியிடம் முறையிட்டு அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டியுள்ளனர். “இதனால் அரக்கனை, பல்வேறு ஆயுதங்களை கொண்டு வதம் செய்து அழித்ததால் பத்ரகாளி எட்டு கரங்களுடன், அரக்கனை உக்கிரமாக வதம் செய்யும் காட்சியுடன், கருவறையில் வீற்றிருக்கிறாள்”.

இதனால் பத்ரகாளியின் கோபத்தை தணிக்க கோவில் முழுக்க கருங்கற்கள் மற்றும் பளிங்குகற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆலயம் எப்போதும் குளுமையாக இருக்கிறது. “எனவே கோட்டை போன்ற வடிவமைப்புடன் மேட்டில் குடிகொண்டுள்ளதால், கோட்டை மேடு பத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறாள்”.

காளியின் காவலான சிங்கமானது, அடிக்கடி வனவிலங்குகளையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனை தடுக்க மக்கள் வேண்டியதை ஏற்று, சிங்கத்தின் சீற்றத்தை குறைக்க அதன் வாயில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்ததாகவும், அதனை குறிக்கும் விதமாக ஆலயத்தில் பத்ரகாளியை பார்த்தவாறு பெரிய சிங்கமானது காட்சியளிக்கிறது. “சிங்கத்தின் வாயில் பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும் எலுமிச்சை வடிவில், கல் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது”. இந்த சிலையானது மிகவும் அபூர்வமானது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சிலையை காண முடியாது. இது அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக விளங்குவதாக காட்சியளிக்கிறது.

மேலும் இந்த சிங்கத்தின் மீது தினமும் இரவு வேளையில் ஊரை காக்க சலங்கை அணிந்து வலம் வந்ததாகவும், அதனை மக்கள் பார்த்துள்ளதாகவும் பரவசமாக கூறுகின்றனர். இது தவிர காளியின் இரு புறத்திலும், பூதகணங்கள் எனப்படும் இரு காவல் தெய்வங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கப்பட்ட சிலைகளாகும். யானைகள் அடிக்கடி காளியை வணங்கியதாகவும், அதனை குறிக்கும் வகையில் ஆலயத்தின் இருபுறங்களிலும் யானை சிலைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பத்ரகாளிக்கு எலுமிச்சை பழத்தில்விளக்கேற்றி வழிபட்டால், குழந்தைப்பேறு கிடைக்கும். மேலும் திருமண தடை நீங்கும், தொழில் வளம் பெருகும் மற்றும் நோய் நொடிகள் உடனடியாக தீரும். இந்த கோவிலில் பூ போட்டு வாக்கு கேற்கும் நிகழ்ச்சியானது மிகவும் விஷேசமாகும். பத்ரகாளி சரியான வாக்கை அருள்வாள் என்பது மக்களின் உண்மையான நம்பிக்கை.

No comments:

Post a Comment