Saturday, November 8, 2014

ஸ்ரீகுபேர யாகம்

செல்வச் செழிப்பினை நல்கும் ஸ்ரீ குபேரன் தான் இழந்த பெருஞ்செல்வத்தை மீண்டும் பெறுவதற்கு ஈசனை வணங்கி வழிபட்டு தன் இன்னல்கள் தீரப் பெற்ற தலம். அதனால் - இத் திருத்தலத்திற்கு  அளகாபுரி எனப் பெயர்.




பராசர முனிவரும் , ரோமரிஷியும், வசிஷ்ட மகரிஷியும், கோரக்க சித்தரும், கொங்கண சித்தரும், சிவவாக்கிய சித்தரும் வழிபட்ட திருத்தலம்.

தஞ்சகன் எனும் அசுரனால் அல்லலுற்ற தேவர்கள் - ஈசனைத் தஞ்சம் அடைந்த தலம்.

அதனால் - இத் திருத்தலத்திற்கு  தஞ்சபுரி எனப் பெயர்.

பின்னாளில் -

சித்தர் கருவூராரும், மகான் சதாசிவப்ரமேந்திரரும், ஸ்ரீ ராகவேந்திரரும் சத்ரபதி சிவாஜியின் குரு ஸ்ரீஸமர்த்த ராமதாஸரும் - திருப்பதங்கள் பதிய நடந்த திருத்தலம்.

அளகாபுரி என்றும் தஞ்சபுரி என்றும்  இங்கே குறிப்பிடப்படும் திருத்தலமே -

இன்று நின்று விளங்கும் - தஞ்சாவூர். 

தஞ்சை மாநகரில் - கரந்தை ஸ்ரீ கோடியம்மன் திருக்கோயிலைக் கடந்ததும் வெண்ணாற்றங் கரையின் தென்கரையில் அமைந்துள்ளது இத் திருக்கோயில்.

ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் உடனாகிய ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்!.. 

மிகப் பழைமை வாய்ந்த இத்திருக்கோயில் மேற்கு நோக்கிய திருத்தலம்.

இத்திருக்கோயிலில் - நேற்று (23/10 - வியாழன்) மாலை வெகு சிறப்புடன் ஸ்ரீமஹாகுபேர யாகம் நிகழ்ந்தது.
அருள்தரு கருவூரார்
ஸ்ரீ தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்
ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில் -  கும்பகோணம் செல்லும் சாலையில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர்  பழைய பேருந்து நிலையத்தில் இருந்து - திருவையாறு, திருக் காட்டுப்பள்ளி, ஐயம்பேட்டை - ஆகிய ஊர்களுக்குச் செல்லும் நகரப் பேருந்துகள் கோயிலின் அருகில் நின்று செல்லுகின்றன.

அரியலூர் மற்றும் கும்பகோணத்திலிருந்து தஞ்சைக்கு வருபவர்கள் - வெண்ணாற்றுப் பாலத்தைக் கடந்து (அரை கி.மீ. தொலைவில்) தஞ்சை மாமணிக் கோயில்கள் எனப்படும் பெருமாள் கோயில்களைக் கண்ணாரக் கண்டு வணங்கியபடி - ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம்.


திருக்கயிலை மாமலையில் - சிவபெருமானை வணங்கி வரங்களைப் பெற்ற இராவணன், ஆணவங் கொண்டு,

வடதிசைக்கு அதிபதியாக - சங்கநிதி, பத்மநிதி மற்றும் புஷ்பக விமானம் இவற்றுடன் விளங்கிய குபேரனிடமிருந்து - அவற்றை அபகரித்துக் கொண்டான்.

அத்துடன் நில்லாமல் அவனது நகரான அளகாபுரியில் இருந்தும் குபேரனை விரட்டியடித்து விட்டான்.

இத்தனைக்கும், குபேரன் - இராவணனின் சகோதரன்.  

இதனால் மனம் வருந்திய குபேரனைக் கண்டு இரங்கிய மாமுனிவர்கள் சிவவழிபாடு செய்யும்படி அறிவுறுத்தி வழிகாட்டினர். அதன் பல தலங்களுக்கும் குபேரன் சென்று ஈசனை வழிபட்டான். 

அப்படி வழிபட்டு வருங்கால் -  பராசர முனிவரின் துயரம் தீர்த்ததும் - தஞ்சகன் எனும் கொடியவனிடம் இருந்து மீள வேண்டி தேவர்கள் இறைவனைத் தஞ்சம் அடைந்ததும் ஆகிய, 

பராசர க்ஷேத்திரம் என வழங்கப்பட்ட தஞ்சபுரிக்கு வந்தடைந்தான். 

கருணையே வடிவான ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகையையும் ஸ்ரீதஞ்சபுரீஸ்வர ஸ்வாமியையும் கண்ணாரக் கண்டு வணங்கினான். நாளும் நறுமலர் கொண்டு வழிபட்டு மெய்யுருகி நின்றான்.

காலம் கனிந்தது. 

தஞ்சபுரீஸ்வரராகிய எம்பெருமானும் ஆனந்தவல்லியாகிய அம்பிகையும் குபேரனின் தவங்கண்டு மனம் இரங்கி ப்ரத்யட்சமாகினர்.




அந்த அளவில் -  குபேரன் அனுபவித்து வந்த துன்பங்கள் எல்லாம்,  தவிடு பொடியாகின. அனைத்துப் பெருமைகளும் குபேரனுக்கு அருளப்பட்டன. 

ஈசனின் முன்னிலையில் - யட்சர்களுக்குத் தலைவனாகவும், வடதிசைக்கு அதிபதியாகவும்  மீண்டும் முடி சூட்டப்பட்டான்.

இத்தனையும் நிகழ்ந்தது - துலா மாதமாகிய ஐப்பசியின் அமாவாசை தினத்தில் என்பது ஐதீகம். 

வாழும் உலகில் பொன் பொருள் மீது நாட்டம் இல்லாதார் யார்!.. 

இருப்பவரும் நாட, இல்லாதவரும் தேட - செல்வமோ ஓரிடத்தில் நில்லாது உருண்டோடிக் கொண்டிருக்கின்றது!.. 

மஹாலக்ஷ்மியின் திருவருள் பெருக்கினால் - குபேரனைப் போல் வாழ எல்லாருக்குமே ஆசைதான்!..

ஆனால் - நிலவுலகில் நில்லாத செல்வம்  - யாரிடத்தில் நின்று நிலைக்கும்?..

சாம கானம் பாடி - இறைவனை மகிழ்வித்து மகத்தான வரம் பல பெற்று வந்த-  ராவணன்  நிலைகெட்டழியக் காரணம் அவன் கொண்ட பெண்ணாசை!..

நிலமகளின் மகனாகத் தோன்றியும் - நிலைத்து வாழ முடியாமல் - அவள் கையாலேயே வதம் செய்யப்பட்டு, நரகாசுரன் மண்ணில் விழக் காரணம் -

அவன் கொண்ட மண்ணாசை!..

ஆசைகளை வென்றவரிடத்தில் தான்  - ஐஸ்வர்யம் நின்று நிலைக்கும்!..

குபேரன் வீழ்ந்ததைக் கண்டு சிரித்து மகிழ்ந்த இராவணன் - குபேரன் மீண்டும் எழுந்தபோது சிந்திக்க மறந்தான்!.. 

நேர்மையான வழியில் சென்றும் - ஒருவன் பொன்னையும் பொருளையும் இழக்க நேர்ந்தால் - அவனை ஈசனே முன்வந்து கை கொடுத்து தூக்கி விடுவான் என்பதே  -

ஸ்ரீ குபேரன் வ்ரலாற்றில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய மெய்ப்பொருள்!.. 

தகாத வழியில் பொருளைச் சேர்த்து உயர்ந்த நிலையில் இருப்பவரை - இன்றைய உலகம் காண்கின்றது.

ஆயினும்,

தரமற்ற செல்வம் - தலை குனிய வைத்து விடும் என்பதே சத்தியம்!..

தன்னலம், பேராசை - எனும் குணங்களை வதம் செய்து விட்டால் - குபேரனே - நேரில் வந்து நம்முடய நல்விருப்பங்களை நிறைவேற்றி அருள்வார்.

குபேர யாகம் செய்தால் அல்லது யாகத்தைத் தரிசித்தால் - வற்றாத செல்வ வளத்தைப் பெறலாம் என்பது ஐதீகம்.

ஒவ்வொரு அமாவாசையிலும்  குபேர யாகமும் அபிஷேகமும் ஆராதனையும் சிறப்பாக நடைபெறுகின்றது.

எனினும் ஐப்பசி அமாவாசையன்று நிகழும் மஹா குபேர யாகம்  மிகவும் விசேஷமானது.

இந்த அடிப்படையில் நேற்று தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடத்தப்பெற்ற மஹா குபேர யாகத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இறை தரிசனம் செய்தனர்.













ஸ்ரீகுபேரன்

லக்ஷ்மி - ஸ்ரீ ஐஸ்வர்ய சிவலிங்கம் - குபேரன் 


சென்ற ஆண்டினைப் போல, இந்த ஆண்டும் - இந்த மஹா யாகத்தில் கலந்துகொள்ளும் பேறு எளியேனுக்கு கிடைத்தது.

அப்போது எடுக்கப்பட்ட சில படங்களை - இங்கு பதிவிட்டுள்ளேன்!..

மகாயாகத்தில் பூரணாஹூதி நிறைவேறியதும் சிவாச்சார்யார் கடத்தினை சுமந்து திருக்கோயிலை வலம் வந்து அஷ்ட லக்ஷ்மி மண்டபத்தில் அமைந்துள்ள ஸ்ரீஐஸ்வர்ய சிவலிங்க சந்நிதியை அடைந்தார்.

அங்கு ஸ்ரீஐஸ்வர்ய சிவலிங்கத்திற்கும் ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கும்
ஸ்ரீ குபேரனுக்கும் சகல திரவியங்களுடன் மங்கலகரமாக அபிஷேகமும் -
மஹா தீப ஆராதனையும் நடந்தது.

இந்த ஆண்டு மிகவும் நெரிசல். மழை சற்றி ஓய்ந்திருந்ததால் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

இருப்பினும் - கண்குளிரும் வண்ணம் அருமையான தரிசனம்.

நமது நண்பர்கள் அனைவரது நலத்திற்கும் வளத்திற்கும் மனதார வேண்டிக் கொண்டேன்.

மனம் நிறைவாக இருக்கின்றது.

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே
நமோ வயம் வைஸ்ரவணாய குர்மஹே
ஸமே காமாந் காம காமா ய மஹ்யம்
காமேஸ்வரோ வைஸ்ரவணோத தாது
குபேராய வைஸ்ரவணாய மஹாராஜாய நம:
சங்கநிதி, பத்மநிதி சகித, 
ஸ்ரீ சித்ரலேகா சமேத ஸ்ரீ குபேர மூர்த்தியின் 
திருவருள் பெற்று அனைவரும் 
நல் வாழ்வு வாழ்வோமாக!..

சிவாய திருச்சிற்றம்பலம்!..

No comments:

Post a Comment