Saturday, November 8, 2014

சதயத் திருநாள்

சோழப் பேரரசை மீண்டும் நிர்மாணித்து புலிக்கொடியை ஏற்றியவர் விஜயாலய சோழர்( கி.பி.848- 871).

ஆயினும்,

சோழப்பேரரசின் புலிக்கொடி மகோன்னதமாக கடல் கடந்தும் பட்டொளி வீசிப் பறந்திடக் காரணமாக விளங்கியவன் - மாமன்னன் ராஜராஜ சோழன்.

ஐப்பசி சதய நட்சத்திரத்தில் (கி.பி.947) சுந்தர சோழருக்கும் {956 - 973} வானவன் மாதேவிக்கும் தோன்றிய அருந்தவப்புதல்வன்!..

தங்கத் தொட்டிலிலிட்டு - தாயும் தந்தையும் - சீராட்டிய போது, சூட்டி மகிழ்ந்த திருப்பெயர் - அருண்மொழிவர்மன்.

அருண்மொழியின் அன்புச் சகோதரன் - ஆதித்த கரிகாலன்.
மகத்தான வீரன். பாண்டிய நாட்டில் சோழ சாம்ராஜ்ஜியத்தை நிறுவுதற்காக -  வீரபாண்டியனுடன் போர் செய்து அவன் தலையைக் கொய்தவன். அதன் காரணமாகவே பின்னாளில் படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்தவன்..

அன்புச் சகோதரி - குந்தவை நாச்சியார்.
நுண்ணறிவிலும் கலைஞானத்திலும் மிகச்சிறந்து விளங்கிய வீர மங்கை. அருண்மொழி சிவபக்தியில் சிறந்து விளங்கிடக் காரணமானவர்களுள் குந்தவையும் ஒருவர்.

மற்றொருவர் - செம்பியன் மாதேவியார்.

மகா சிவபக்தராகிய கண்டராதித்த சோழரின் பட்டத்து அரசி. 
பெரிய பிராட்டியார் எனப் புகழப்பட்டவர். 

கண்டராதித்த சோழர் சிவநெறிச் செல்வர். 
தில்லை ஆடவல்லானைத் தொழுது நின்ற தூயவர். 

இவர் இயற்றிய திருப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன.

அதுவரையிலும் சுண்ணாம்புச் சாந்தும் செங்கல்லுமாக விளங்கிய சிவாலயங்களை  - கருங்கற்களைக் கொண்டு கற்றளிகளாக மாற்றிய பெருமையை உடையவர் - கண்டராதித்த சோழர்.

கணவரின் காலத்திற்குப் பிறகு சிவப்பணி செம்மலாக விளங்கியவர் -   செம்பியன் மாதேவியார்.

இவரது திருப்பெயரால் - இன்றும் தஞ்சை மாவட்ட கடற்கரை ஓரத்தில் விளங்கி வரும் ஊர் - செம்பியன் மாதேவிப் பட்டினம்.

தன் கொழுந்தனாரின் பேரப்பிள்ளைகளான குந்தவை, ஆதித்த கரிகாலன், அருள்மொழி ஆகியோரின் மீது அளப்பரிய பாசமும் நேசமும் கொண்டு வளர்த்த பெருமைக்கு உரியவர் செம்பியன் மாதேவியார்.

சோழ தேசத்தின் திருக்கோயில்கள் பலவற்றிலும் திருப்பணிகளை மேற்கொண்ட இவரது - வளர்ப்பினால் தான்,

அரியணை ஏறியதும் வானளாவிய ஸ்ரீவிமானத்துடன் பிரம்மாண்டமாக தக்ஷிணமேருவை தஞ்சைத் தரணியில் எழுப்பினான் - ராஜராஜ சோழன்!..




தனது தந்தை சிவகதி எய்திய பிறகு - அரியணை ஏறாமல்,

கண்டராதித்த சோழர் - செம்பியன் மாதேவியார் ஆகியோரின் மகனும் தனது சித்தப்பாவும் ஆகிய உத்தம சோழனை சோழ மண்டலத்தின் மன்னனாக ஆக்கி அழகு பார்த்தவன் - ராஜராஜ சோழன்!..

இந்த உத்தம சோழனே மதுராந்தகன் எனப்பட்டவன். செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள மதுராந்தக ஏரி - இந்த மன்னனின் சாதனை!..

தென்னக வரலாற்றில் பொற்காலம் எனப் பெருமையுடன் குறிக்கப்படும் ஆட்சிக்குரியவன் - ராஜராஜ சோழன்!..



சங்கு சக்ர ரேகைகளுடன் மஹாவிஷ்ணுவின் அம்சமாகப் பிறந்தவன் என மக்களால் கொண்டாடப்பட்டவன் - ராஜராஜ சோழன்!..

குட ஓலைத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு சோழ மண்டலத்தின் நிர்வாகத்தினை திறம்பட நடாத்தியவன் - ராஜராஜ சோழன்!..

மும்முடிச்சோழ மண்டலம் முழுமையையும் முறையாக அளந்து - நிலத்தின் தன்மைக்கேற்ப வரிவிதித்து - அதையும் கிராம சபைகளின் மூலமாக தணிக்கை செய்து நெறிப்படுத்தியவன் - ராஜராஜ சோழன்!..


தனது ஆட்சியின் நிகழ்வுகளை மக்களும் எதிர்வரும் சந்ததியினரும்  அறியும் பொருட்டு கல்வெட்டுகளாக்கி வைத்தவன் - ராஜராஜ சோழன்!..

மூவர் அருளிய திருப்பதிகங்கள் ஒலைச்சுவடிகளாக - தில்லைத் திருச்சிற்றம்பலத்தின் நிலவறைக்குள் கிடக்க,

அவற்றைப் பெரும் முயற்சியால் மீட்டு - திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி அவர்களைக் கொண்டு தேவாரமாகத் தொகுத்தவன் - ராஜராஜ சோழன்!..

அதனால் தான் - சிவபாத சேகரன், திருமுறை கண்ட சோழன் எனப் புகழ் கொண்டான்.

மும்முடிச்சோழன், ஜனநாதன், ஜயங்கொண்டான், சோழ மார்த்தாண்டன், ராஜ மார்த்தாண்டன், நித்ய விநோதன், பாண்டிய குலாசனி, கேரளாந்தகன் - என்பன மாமன்னன் ராஜராஜ சோழனின் சிறப்புப்பெயர்களுள் சில!..

ராஜராஜ சோழனின் கல்வெட்டுகள் மெய்கீர்த்தி எனப்படுகின்றன.

ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளி
வேங்கை நாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
எண்டிசை புகழ்தர ஈழ மண்டலமும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்
திண்டிறல் வென்றித் தண்டால் கொந்தன் பொழில் வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும் தொழுதகை விளங்கும் யாண்டே செழிஞரை தேசு கொள் ஸ்ரீகோவிராஜராஜ கேசரி பந்மரான ஸ்ரீராஜராஜதேவர்...
(நன்றி - விக்கிபீடியா)

கடல் கடந்த போர்களாக ஈழத்தின் மீதும், முந்நீர்ப் பழந்தீவுகள் பன்னீராயிரம் எனப்பட்ட மாலத்தீவுகளின் மீதும் தொடுக்கப்பட்ட போர்கள் குறிக்கப் படுகின்றன.

ராஜராஜ சோழன் வழி நடத்திய கடற்படையின் துணை கொண்டே ராஜேந்திர சோழன்  கடாரம் ஜாவா சுமத்ரா ஆகிய நாடுகளை வென்று புகழ்க் கொடியினை நாட்டினான்.

பெரும் சிவபக்தனாக விளங்கினாலும் வைணவ ஆலயங்களையும் புத்த விஹாரங்களையும் எழுப்பிய விவரத்தினை கல்வெட்டுகள் கூறுகின்றன.

தமிழகத்தின் கட்டிடக் கலைக்கும்  பாரதத்தின் பெருமைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குவது - 

தஞ்சை ராஜராஜேஸ்வரம் எனும் பெருவுடையார் திருக்கோயில்.

வானளாவி நிற்கும் இத்திருக்கோயில் மாமன்னனின் இருபத்தைந்தாம் ஆட்சி ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 

பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய பின் கேரளத்தில் படை நடத்தி - காந்தளூர்ச் சாலைக் களமறுத்தருளிய கோப்பரகேசரி எனப்புகழ் கொண்டான். 

கொடுமை மிகுந்த சிங்களர்களிடமிருந்து ஈழ நாட்டைக் கைப்பற்றப்பட்டது. 

சிங்களரை அடக்கியதுடன் கன்னடத்தின் கங்கபாடியும் நுளம்ப பாடியும் தடிகை பாடியும் மேலைச் சாளுக்கியமும் வேங்கை நாடும் சோழப்பேரரசுக்கு உட்பட்டன.
மாமன்னன் ராஜராஜ சோழன் இப்பூவுலகில் தோன்றி 1029 ஆண்டுகள் ஆகின்றன. 

தஞ்சையில் நேற்று முன்தினம் சதயத் திருவிழா சிறப்புடன் தொடங்கியது.
சென்ற ஆண்டினைப் போலவே - இந்த ஆண்டும் சிவதரிசனம் பெற்றேன்.

சதய விழாவின் எல்லா நிகழ்வுகளையும்  படம் எடுக்க இயலவில்லை.

இயன்றவரை சில படங்கள் இந்தப் பதிவில் இடம் பெற்றுள்ளன.



இரண்டு நாட்களும் (1/11 மற்றும் 2/11) திருக்கோயிலின் திருச்சுற்றில் விசாலமாக அமைக்கப்பட்டிருந்த அலங்காரப் பந்தலில் மங்கள இசையுடன் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.

ஓதுவார்களின் திருமுறை அரங்கம், அப்பர் சுவாமிகள் தேவார குழுவினரின் திருமுறை பாராயணங்கள், கருத்தரங்கம் எனத் தொடர்ந்து மாலையில் பல்வேறு குழுவினரின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளும் நடந்தன.

நேற்று (2/11/2014) காலையில் திருமுறை வலம். அதன்பின் -

ராஜராஜசோழனின் திருமேனிக்கு மலரஞ்சலி சிறப்பாக நிகழ்ந்தது. 

ஸ்ரீ பெருவுடையார் ஸ்வாமிக்கும் ஸ்ரீ ப்ரஹந்நாயகி அம்பிகைக்கும் சிறப்பு மஹா அபிஷேகம்  நடந்தது.


நன்றி - தினமணி
சந்நிதியில் கண்கொள்ளாக் காட்சியாக சிறப்பான அலங்காரத்துடன் பெருந்தீப வழிபாடு நிகழ்ந்தது.

மாலையில், அரங்கத்தில் இன்னிசை நிகழ்ச்சிகளுக்குப் பின் - நாட்டியாஞ்சலி அதன் பின் கருத்தரங்கம் என கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அந்தி மயங்கும் வேளையில் -

மங்கல இசையுடன் திருக்கயிலாய சிவகண வாத்யங்கள் முழங்க, 
சர்வம் சிவமயம் என - பாரம்பர்ய பறையொலி கூத்தொலி முழங்க,
கைவளை குலுங்க காரிகையர் நிகழ்த்திய கோலாட்ட கும்மி ஒலி முழங்க - 

ஸ்ரீ பெருவுடையார் ஸ்ரீ ப்ரஹந்நாயகி சமேதரராக பெரிய ரிஷப வாகனத்தில் திருவீதி உலா எழுந்தருளினார்.




ராஜராஜ சோழன் உலா திருமேனி
அச்சமயத்தில் எம்பெருமானின் திருக்கோலத்தினைத் தரிசித்தவாறே - ராஜராஜ சோழனும்  ராஜவீதிகளில் வலம் வந்தருளினார்.

திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்து தரிசித்து மகிழ்ந்தனர்.

திரு உலாவின் போது - நான்கு ராஜவீதிகளிலும் உள்ள திருக்கோயில்களின் சார்பாக ஈசனும் அம்பிகையும் மாமன்னனும் வரவேற்கப்பட்டனர்.

ராஜவீதி நெடுகிலும் மாலைகள் சாற்றப்பட்டு மங்கல ஆரத்தி எடுக்கப்பட்டது.

மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர்.


பார் கொண்ட பெருமையெல்லாம் ஊர் கொண்டு நிற்கும் வண்ணம் 
பேர் கொண்டு நிற்கின்றது பெரிய கோயில்!..

தேர் கொண்ட மன்னன் சிவபாத சேகரன் சீர் கொண்டு நின்றனன்!..
பேர் கொண்டு நின்றனன்.. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!..  
திருவீதி கண்டருளிய  
மாமன்னன் ராஜராஜ சோழன் புகழ் ஓங்குக!..

No comments:

Post a Comment